ஒருத்தரும் வரலைன்னா என்னங்க அர்த்தம்?.. தலைமைக்கு பறந்த மெசேஜ்.. கொதிப்பில் தமிழக காங்.. என்னாச்சு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரம் இன்று நடக்க உள்ள நிலையில், தமிழக காங்கிரசில் இன்னும் கோஷ்டி மோதல் முடியாமல் நீடித்து வருகிறது. பல இடங்களில் தேர்தல் பணிகள் நினைத்த அளவிற்கு நடக்கவில்லை என்கிறார்கள்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழக காங்கிரசுக்குள் பெரிய அளவில் கோஷ்டி மோதல்கள் நிலவி வந்தன. முக்கியமாக வேட்பாளர் தேர்வில் நிறைய குளறுபடி ஏற்பட்டது. காங்கிரசின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக வந்து வேட்பாளர் தேர்வில் குளறுபடி நடக்கிறது என்று புகார் வைத்தனர்.
எம்பி ஜோதிமணி உள்ளிட்டவர்கள் வெளிப்படையாக வேட்பாளர் தேர்வுக்கு எதிராக பேசி பரபரப்பை கிளப்பினார்கள். அதன்பின் இந்த பரபரப்பு அடக்கினாலும் இன்னும் பெரிதாக காங்கிரசுக்குள் கோஷ்டி மோதல் குறையவில்லை.

தேர்தல் பணிகள்
முக்கியமாக தேர்தல் பணிகள் பெரிய அளவில் நடக்கவில்லை என்று புகார் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் இதில் 18 தொகுதிகள் தவிர மீதம் உள்ள 7 தொகுதிகளில் பெரிய அளவில் தேர்தல் பணிகள் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கு நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை, ஒன்றிரண்டு கூட்டங்கள் மட்டுமே நடக்கிறது என்று புகார் வைக்கப்படுகிறது.

நிர்வாகிகள்
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்ததில், பெரிதாக தேர்தல் பணிகள் நடக்கவில்லை. நிர்வாகிகள் கூப்பிட்டால் வருவது இல்லை. தனி தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். கூட்டணி கட்சி நிர்வாகிகளை வைத்துத்தான் வேலை பார்க்கிறோம் என்று குமுறுகிறார்கள். இன்னொரு பக்கம் தேசிய தலைமையும் கடைசி ஒரு மாதமாக பெரிதாக தேர்தல் மீது கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள்.

ராகுல்
ராகுல் ஆரம்பத்தில் தமிழகம் வந்தார். ஆனால் அதன்பின் வரவில்லை. சில நாட்களுக்கு முன் அவர் தமிழகம் வந்தது தான் கடைசி பயணம். பிரியங்கா வருவதாக இருந்ததும் கொரோனா காரணமாக கேன்சல் ஆகிவிட்டது. பெரிய தலைவர்கள் யாரும் டெல்லியில் இருந்து வந்து பிரச்சாரம் செய்யவில்லை. இப்படி இருந்தால் என்ன செய்ய முடியும் என்று புலம்புகிறார்கள்.

வரவில்லை
இது தொடர்பாக சில வேட்பாளர்கள் தலைமையிடம் பேசியும் எதுவும் மாறவில்லையாம். அதோடு பாஜகவில் பிரதமர் மோடி இரண்டு முறை வந்துவிட்டார், அமித் ஷா வந்தார் , யோகி ஆதித்யநாத் கூட வந்துவிட்டு போனார். ஆனால் காங்கிரசில் அப்படி பிரபலமான தலைவர்கள் வரவில்லை.

பாஜக
பாஜக மிக கடுமையாக வேலை பார்க்கிறது. பல டீம்களை இறக்கி உள்ளது. ஆனால் காங்கிரஸ் அப்படி இல்லை . 25 தொகுதிகளில் அட்லீஸ்ட் ஸ்டார் வேட்பாளர் தொகுதிக்காவது வந்துவிட்டு சென்று இருக்கலாம்.இப்படி ஒருத்தரும் வரவில்லை என்றால் என்ன அர்த்தம். எப்படி தேர்தல் பணிகள் நடக்கும் என்று நிர்வாகிகள் பலர் கேட்கிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் தமிழக காங்கிரஸோ கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளது. சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தவறான கோஷ்டி மோதல் என்று கூறுகிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications