இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயரும்? - மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி கேட்ட மின் வாரியம்!
சென்னை : ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக்கோரி ஆணையத்திடம் மனுவைச் சமர்ப்பித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தால், வரும் செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்கப்படாது..செந்தில் பாலாஜி உறுதி
உயரும் மின் கட்டணம்
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்.
மின்சார வாரியம்
தமிழக மின் வாரியம், ஆண்டுதோறும் நவம்பருக்குள் தன் மொத்த வருவாய், தேவை அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆணையம் ஆய்வு செய்து, வருவாயை விட செலவு அதிகம் இருந்தால், பற்றாக்குறையை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கும்.
உயர்த்த திட்டம்
2021-22 நிலவரப்படி மின்சார வாரியத்தின் மொத்த கடன் சுமை ரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22-ல் மின்வாரியம் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ.16,511 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக்கோரி ஆணையத்திடம் மனுவைச் சமர்ப்பித்துள்ளது.
செப்டம்பர் முதல்
இந்த மனு மீது ஆணையம் விசாரணை நடத்துவதோடு, மக்களிடம் கருத்தும் கேட்கிறது. அதன்பிறகு மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்படும். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தால், வரும் செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் உயர்த்த திட்டம்
இந்நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் சமர்ப்பித்துள்ள மனுவில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6% உயர்த்தவும் அனுமதி கோரியுள்ளது. வரும் 2026-27 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின் நுகர்வோர் ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.