மதுரைவாசிகளுக்கு குட் நியூஸ்.. மதுரையிலும் வருகிறது மெட்ரோ ரயில்.. வந்தது அறிவிப்பு!
சென்னை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தபடும் என்றும் மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து ஆராயப்படும் என்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் விறுவிறுப்பாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அவற்றை கீழே காண்போம்.

கோவையில் மெட்ரோ ரயில்
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் 2-ம் திட்டம் 2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரமான கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

மதுரையில் மெட்ரோ
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பட்ஜெட்டில் கூறியுள்ளார். இதேபோல் பெரிய நகரமான மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்படும். மேலும் கோவை கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை- ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பஸ் நிலையம்
தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் திருச்சியில் புதிய பேருந்து நிலையம் இல்லாத நிலையில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர்
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.5,421.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,230 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் கூறியுளளார். இது தவிர பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications