2-ம் தவணையான ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்கள் ஜூன் 15 முதல் வழங்கப்படும் - தமிழக அரசு
சென்னை: கொரோனா நிவாரண நிதியான ரூ.2,000, 14 வகையான மளிகை பொருட்களை வருகிற 15-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதில் முதல் தவணையாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தையும், ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான 3-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் நிவராண நிதி மற்றும் 14 வகையான மாளிகை பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் 11.6.2021 முதல் 14.6.2021 வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை வருகிற 15.6.2021 முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன் முறை ஒதுக்கப்பட்டுள்ளதுபடி ரேஷன் கடைகளுக்கு சென்று ஒரே நேரத்தில் மளிகை பொருட்களையும், ரூ.2 ஆயிரத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.