கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை 'வாபஸ்' பெறும் தமிழக அரசு.. ஆளுநருக்கு கடிதம்! என்னாச்சு?
சென்னை : கூட்டுறவு சங்க விதிகள் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக, தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. இந்த மசோதாவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டிருந்த, பதவிக்காலம் தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தற்போது மசோதாவை திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் வேறொரு மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருப்பதை 3 ஆண்டுகளாக குறைப்பது உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டு இருந்தார்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
தமிழக ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டு காலம் பதவி இருப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசின் சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாபஸ் பெற ஆளுநருக்கு கடிதம்
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவே நீடிக்க உள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் கூடும் தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு சங்க திருத்தம் தொடர்பாக ஒரு புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

விளக்கம் கேட்ட ஆளுநர்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஐந்தாண்டுகள் கூட்டுறவு சங்கங்களுடைய பதவி காலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டுறவு சங்க பதவிகளின் பதவி காலத்தை ஏன் மூன்றாண்டுகளாக குறைத்தீர்கள் என்று ஆளுநர் தரப்பில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications