ஆளுநர் நாளை திடீர் டெல்லி விசிட்.. ஒரே நாளில் ரிட்டர்ன்.. என்ன திட்டம்? அந்த 21 மசோதாக்கள் விஷயமா?
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 7 மணியளவில் டெல்லிக்கு கிளம்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை மறுநாள் சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டெல்லி பயணத்தின்போது, ஆளுநர் ரவி, தமிழக முதல்வரின் கோரிக்கைகள் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

மோதல் போக்கு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே, மோதல் போக்கு இருந்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் ரவி காலந்தாழ்த்தி வருவதை முதல்வர் உள்ளிட்ட திமுக மக்கள் பிரதிநிதிகள் கண்டித்து வருகின்றனர். மாநில அரசின் கொள்கை நிலைப்பாடான புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ரத்து ஆகியவற்றுக்கு எதிராகவே தொடர்ந்து பேசி வருகிறார் ஆளுநர் ரவி.

திமுக அரசு
தமிழக ஆளுநரின் இத்தகைய செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருக்கிறது தமிழக அரசு. அதன் வெளிப்பாடாகவே, மாநில அரசின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று டெல்லி நாடாளுமன்றத்திலேயே திமுக எம்.பிக்கள் முழங்கினர். சமீபத்திலும், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள 22 மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தினார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் டெல்லி பயணம்
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லி புறப்பட இருக்கிறார். அடுத்த நாள் அவர் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பேசுவாரா?
தலைநகர் டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைந்து முடிவெடுக்குமாறு ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியது குறித்து டெல்லி சென்று அவர் பேசக்கூடும் எனக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இதற்கிடையே குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் டெல்லியில் நடந்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 14 பேர் கொண்ட குழுவை அமைத்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருக்கிறார். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications