'சிங்கம்.. சிங்கிளா தான் வரும்' - வெற்றிக்குப் பின் சீறிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்!
சென்னை: 'சிங்கம் சிங்கிளா தான் வரும்' என வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசி இருக்கிறார் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் 134வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் உமா ஆனந்தன். தன்னை கோட்ஸேவின் மாணவி என்று சொல்லி பிரசாரம் செய்தார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 134-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உமா ஆனந்தன்
''எனக்கு வாக்களித்த எல்லோருக்கும் நன்றி. எனக்கு நம்பிக்கை, ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி. எனக்காக பலர் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தனர். அவ்வளவு வேலைகளை செய்தனர். அவர்கள் செய்த வேலைகள் மூலம் என்னை வெற்றிபெற செய்துள்ளனர். அதிகாரபூர்வமாக எனக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது என்று நீங்களே சோதித்துவிட்டு போடுங்கள். வதந்திகளை பற்றி நான் பேசவிரும்பவில்லை'' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் உமா ஆனந்தன்.

கோட்ஸே
பிராமின் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.. ஜாதிகள் இருக்கிறது.. அது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்று. ஜாதிதான் நம்முடைய அடையாளம் ஜாதிகள் இல்லை என்றால் நம்முடைய கலாச்சாரம் கிடையாது என உமா ஆனந்த் ஏற்கெனவே பேசி இருந்தார். அதேபோல கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயம். அவர் ஒரு இந்து. நான் பெருமையாக சொல்கிறேன், நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் தெரிவித்திருந்தது சர்ச்சையானது. அதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்தார்.

ஒரே கவுன்சிலர்
உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் ஒரே பாஜக கவுன்சிலராக தேர்வாகி இருக்கிறார். இதன்மூலம் சென்னையில் பாஜக காலூன்றி இருக்கிறது. ''சென்னை மாநகராட்சியில் திமுக 170க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. நீங்கள் பாஜகவில் இருந்து ஒரே ஆள், எப்படி சமாளிப்பீர்கள்?'' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சிங்கம்
இதற்கு உமா ஆனந்தன் பதிலளிக்கையில், ''வாஜ்பாய் மற்றும் அத்வானி லோக் சபா தேர்தலில் எப்படி தொடங்கினார்களோ, நாங்களும் அப்படியே சென்னையில் தொடங்கி இருக்கிறோம். சிங்கம் சிங்கம் தான்.. ஒத்தையா தான் வரும்'' என உமா ஆனந்தன் சொல்ல, அவர் பின்னால் நின்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் கரகோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications