மேகதாது அணை.. தமிழக அரசு முன் வைத்துள்ள வாதத்தின் முழு விவரம்!
சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.
தமிழக அரசு முன் வைத்த வாதத்தின் முழு விவரம்:
தமிழ்நாடு அரசு தெரிவித்த நியாயமான மறுப்புகளை பரிசீலிக்காமலும், தமிழ்நாடு மற்றும் இதர படுகை மாநிலங்களின் இசைவு பெறாமலும் மத்திய நீர்வளக் குழுமம், விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரிப்பதற்கு அனுமதி அளித்ததற்கு தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி அளித்துள்ளது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறும் செயலாகும்.
இந்த அனுமதியானது கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காவேரி டெல்டா விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவு தமிழ்நாடு மக்களிடையே ஆழ்ந்த கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிய பங்கு நீர் கிடைக்காமல் போய்விடக் கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடும் என மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் 14.75 டிஎம்சி அடி நீரை கர்நாடகத்திற்கு கூடுதலாக அளித்தும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் புதிய அணை உருவானால் இயல்பான ஆண்டுகளில் கூட தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் பெற இயலாத சூழ்நிலை ஏற்படும் . நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கடந்த காலங்களில் செயல்பட்டது போலவே கர்நாடகா நீரை முழுமையாக தனது உபயோகத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ளும்.
பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக நெட்கல் ஈடு செய்யும் நீர்த் தேக்கத்திலிருந்து நீரை கர்நாடகா ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே குடிநீருக்காக மேகதாதுவில் அணை கட்ட அவசியம் ஏதும் இல்லை. அவ்வாறு அணை கட்டப்படுமேயானால் கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் பிலிகுண்டுலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாட்டிற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும் நீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் தமிழ்நாட்டின் பாசனத்திற்கு மிக முக்கியமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் நீர் கிடைக்காமல் போய்விடும். இது காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறிய செயலாகும்.
கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு மாதாந்திரவாரியாக நீர் விடுவிப்பதற்கு காவிரி படுகையில் தற்போது உள்ள நீர்த் தேக்கங்களே போதுமானது என்று காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அணையிலிருந்து மாதாந்திரவாரியாகவும் 10 நாட்களுக்கு ஒரு முறையும் தமிழ்நாட்டிற்கு நீரை விடுவிப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு எந்த தேவையும் எழவில்லை.
பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல் என்ற போர்வையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினால் நீர் தேக்கும் கொள்ளளவு அதிகரிப்பதோடு அம்மாநிலத்தில் பாசனப்பரப்பை விரிவுப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற ஆணையையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறும் செயலாகும். இவ்வணை கட்டப்பட்டால் தமிழக உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
தமிழக விவசாயிகளின் நலன்களை பாதிப்பதாலும், தமிழ்நாடு இத்திட்டத்திற்கு மறுப்புகளை தெரிவித்துள்ளதாலும் மற்றும் தமிழ்நாடு மற்றும் இதர படுகை மாநிலங்களின் முன் அனுமதியை பெறாததாலும் கர்நாடகா விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் வழங்கியுள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று உரிய அறிவுரையினை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு வழங்க வேண்டும் என முதல்வர் 27.11.2018 அன்று பிரதமர் மற்றும் நீர் வள ஆதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்கள்.
மேலும் கர்நாடகாவிற்கு வழங்கியுள்ள அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு 30.11.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.