அதென்ன சிந்து சரஸ்வதி நாகரிகம்? கோடி கொட்டியும் கிடைக்கலையே.. ஆளுநர் ரவியை விளாசிய செல்வப்பெருந்தகை
சென்னை: திராவிடர்களின் பெருமைமிகு வரலாறான சிந்துசமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என ஆரியர்களுக்கு உரியதாக மாற்ற முயற்சிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்ற பாடத்தின் மூலம் இல்லாத ஒரு நாகரிகத்தை கட்டமைக்க முயற்சி செய்தது பாஜக, இன்று ஆளுநர் 'சிந்து சமவெளி நாகரிகம்' என்பதற்கு பதிலாக 'சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் ஆளுநர்.

பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் 'வாட்ஸ் அப் பல்கலைக்கழக'த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்.
அதனால்தான் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன?
சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய ஆளுநர் ரவி,வேதங்களின் மூலம் இந்த நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் எவ்வாறு வரையறுத்து வருகின்றன என்பதையும் விளக்கினார். ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது. நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications