30 ஆண்டு கோர போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்!
சென்னை : இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இக்கொடூர சம்பவத்தின் முழு பிண்ணனி குறித்து பார்க்கலாம்..
இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து அதிகாரம், பணம், பலம், வாழ்வு, இருப்பிடம், உணவு என பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான போர்களை அனுதினமும் கண்டும், கடந்தும் வந்திருக்கிறது.
தனிப்பட்ட மோதல்கள் தொடங்கி இராஜ்ஜியங்களின் பெரும் போர்கள் வரை நாம் ஆயிரக்கணக்கான போர்களை கேள்வி பட்டிருப்போம். ஆனால் நேரில் கண்டிருக்க மாட்டோம். ஆனால் நம் மீதே போர் தொடுத்ததைப் போல், மார்பில் குண்டு பாய்ந்ததைப் போல் உணர வைத்தது இலங்கை தமிழர்கள் மீதான் இறுதி கட்ட போர்.
நெல்லை கல்குவாரி விபத்து! 5வது நபரை மீட்கும் பணி தீவிரம்! நிச்சயம் மீட்போம் - நெல்லை ஆட்சியர் உறுதி
முள்ளிவாய்க்கால் படுகொலை
தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளில் உதவியோடு இருந்த இலங்கையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரும் படை. அதுதான் பிராபகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தங்களுக்கு விடுதலையை வாங்கி தர உதித்த ஒரு உன்னத தலைவனாக பிராபகரனை கருதினர் இலங்கை வாழ் தமிழர்கள். அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி.
இலங்கை இறுதி கட்ட போர்
இங்கு இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஈழ தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.
கோர சம்பவம்
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால். இதன் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வீரமும் கண்ணீரும் ரத்தமும் ஒருங்கே கலந்து உருவாகிய முல்லிவாய்க்கால் என்ற கோர சம்பவம் குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம். இலங்கைத்தீவில் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு கடற்கரை முல்லிவாய்க்கால்.
வரலாற்று முக்கியத்துவம்
அன்று ஒரு சாதாரண கிராமமாக இருந்த முள்ளிவாய்க்கால் இன்று உலகளாவிய அனைத்து தமிழ் மக்களும் தினம் தினம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. ஏன் உலகளாவிய அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்ற ஒரு இடமாக அமைந்து விட்டது முள்ளிவாய்க்கால். வரலாற்றுத் தொன்மைமிக்க பல்வேறு துறைமுகங்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் அதிகமாகக் காணப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படகு துறைமுகமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் ஐரோப்பியர் காலத்திலும் தனது முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ளவில்லை.
பெரும் மதிப்பு
முள்ளிவாய்க்கால் கிராமத்தில் விளைவிக்கப்பட்ட உப்புக்கும் பயிரிடப்பட்ட வரைக்கும் அந்த காலங்களில் பெரும் மதிப்பு இருந்தது முள்ளிவாய்க்கால் வெற்றிலை என்றாலே அதற்கு கிடைக்கும் வரவேற்பும் விலையும் அதிகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1800 ஆம் ஆண்டுகளின் ஆங்கிலேயப் படைகளை விரட்டி அடிப்பதற்காக இலங்கை மாபெரும் மன்னன் பண்டாரவன்னியன் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடமாடியதாக தகவல்கள் உள்ளன. இந்த சம்பவம் நடந்து இரண்டு நூற்றாண்டுகள் கழித்து தமிழர்களுக்கு தலைமை தாங்கிய மற்றொரு தலைமையை இறுதியாக கண்ட இடமாகவும் முள்ளிவாய்க்கால் அமைந்துவிட்டது.
இரு மாபெரும் தலைவர்கள்
ஈழத்தமிழர் வரலாற்றில் பண்டாரவன்னியன், பிரபாகரன் என இரு மாபெரும் தலைவர்கள் இறுதியாக உயிர் நீத்த இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதியப்பட்டது. மனிதகுல வரலாற்றில் இன வெறிக்கும் மத வெறிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பலியான நிலையில், யூதர்களுக்கு எப்படி ஹிட்லரும் அதேபோல ஈழத்தமிழர்களுக்கும் ஒரு குடும்பம் எமனாக மாறியது. அவர்கள் வேறு யாருமல்ல தற்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஊர் ஊராக ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ராஜபக்ச குடும்பம் தான். பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வந்த தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் தனது இறுதிக் காலத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது 21ஆம் நூற்றாண்டிலேயே மனிதகுலத்துக்கு எதிரான ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையாக முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது.
மக்கள் படுகொலை
பல நாடுகளில் ஆயுத உதவியோடு அசுர பலத்தோடு இருந்த இலங்கையை எதிர்த்து உணவின்றி உறக்கமின்றி இருந்த தமிழ் மக்கள் இறுதிவரை போராடினார். எப்படியாவது போரில் ஜெயித்து விடும் வேண்டும் என்று எண்ணி ரசாயன கொத்து குண்டுகளை அள்ளி வீசி மக்களை தொடர்ந்து கொன்று கொண்டிருந்தது இலங்கை இராணுவம். 2019ஆம் ஆண்டு மே மாதம் 16, 17 ஆகிய நாட்களில் நடந்த இந்த கொடுமை இதுவரை உலகில் எங்கேயும் நடக்கவே இல்லை என்னுமளவுக்கு முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் தமிழ் இனத்தை கொன்று புதைதுக் கொண்டிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 1 லட்சம் ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்டனர். இல்லை இல்லை விதைக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கல் நினைவு தினம்
களத்தில் வீழ்த்தப்பட்ட பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களின் மார்பினை அறுத்து சிங்களப் படையின் கொடுமையை இதுவரை இவ்வுலகம் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை என்ற அளவுக்கு இருந்தது அவர்களின் அடாவடி. தமிழீழம் என்ற தனியாத இலட்சியத்திற்காக மாண்டுபோன 1.50 லட்சம் மக்களின் தியாக தீபம் தான் முள்ளிவாய்க்கால். தனித் தமிழீழம் என்ற இலட்சிய கனவுக்காக ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது முள்ளிவாய்க்கால். தியாகிகள் புதைக்கப்படுவதில்லை அவர்கள் புதைக்கப் படுகிறார்கள் என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தி வருகிறது முள்ளிவாய்க்கால்.
கண்ணீர் அஞ்சலி
இன்றுவரை நீதி வழங்கப்படாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி உலகத் தமிழர்கள் அனைவரும் பேதங்களை துறந்து, சுயலாப, சுய விளம்பரப்படுத்தல்களைக் கடந்து ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.