தக்காளி மட்டுமல்ல காய்கறிகள் விலையும் உச்சம் தொட்டது... கவலையில் இல்லத்தரசிகள்
கோடை மழையால் தக்காளி செடிகள் அழுகியதால் சந்தைக்கு வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
சென்னை: கோடை மழையால் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் பீன்ஸ், அவரை உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் 22வது நாளாக இன்று தக்காளின் விலை அதிகரித்துள்ளது. நாட்டுத்தக்காளி, நவீன தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயாக விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி இன்று ரூ. 100 க்கும் நவீன தக்காளி இன்று ரூ.110 க்கும் விற்பனையாகிறது.
அசானி புயல் காரணமாக, தொடர் கனமழையினால் மேல் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தக்காளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 லாரிகள் தக்காளி ஏற்றி வரும் நிலையில், தற்போது 30 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே தக்காளியின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 950 முதல் 1,050 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து விற்கப்படுகிறது.
பின்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று ரூ.110 ஆக இருந்த பீன்ஸ் விலை, இன்று ரூ.120 ஆகவும் நேற்று ரூ.80 என்றிருந்த அவரைக்காய் இன்று ரூ. 90 ஆகவும் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் பீன்ஸ் கிலோவிற்கு ரூ130 க்கும் அவரை கிலோவிற்கு ரூ.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து உள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டு பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
பாலக்கோடு மார்க்கெட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பாலக்கோடு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகியது. விலை உயர்வு இதனால் கோடை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1000 முதல் ரூ.1,300 வரையும், 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரை ரகத்திற்கு ஏற்றார் போல் விற்பனையானது. விலை உயர்வு குறித்து பேசிய விவசாயிகள், பாலக்கோடு பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் கிலோ ரூ.100க்கு விற்பனை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசலில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒசூர், ஊட்டி, பெங்களூர், ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு அதில் சேலம், ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மொத்த வியாபரிகள் வந்து லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோ மூலம் காய்கறிகளை வாங்கி சென்று பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த மாதம் வரை 28 கிலோ கொண்ட ஒரு தக்காளி டிப்பர் ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மடங்கு உயர்ந்து, ரூ. 1600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே தக்காளி சில்லரை விற்பனையில் 110 முதல் 120 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். தக்காளி விற்பனை மந்தமாகவே நடைபெறுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தேவையின் அடிப்படையில் நியாய விலை கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.