உச்சக்கட்ட டென்சனில் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. இன்று அதிமுகவுக்கு முக்கிய நாள்! வெளியாகும் பொதுக்குழு தீர்ப்பு
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வெளியிட்டார்.
அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜீலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
வெடிக்க போகும் 4 கன்னி வெடிகள்.. எடப்பாடி மட்டும் பொதுக்குழு வழக்கில் தோற்றால் என்ன ஆகும்? பின்னணி
பழைய நிலை
ஜூலை 23க்கு முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவால் அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் நிலை தலைகீழானது.
ரிப்பீட்டான நிலை
எனவே பொதுக்குழு முடிவின்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்பது உறுதியானது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாமல்போனது. அத்துடன் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்ததால் கட்சியின் தலைமை அவர் கைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனை அடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
இன்று தீர்ப்பு
அதில் ஒரு கட்சியின் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், ஒவ்வொரு விவகாரத்துக்கும் நீதிமன்றத்தை அணுகும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை என்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன் சில நாட்களாக நடந்து வந்தது. நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.