பிரதமர் குறித்த பிபிசி ஆவணப்படம்.. தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம்.. திருமாவளவன் அறிவிப்பு!
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட திருமாவளவன் முயற்சி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் இருப்பதால், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் பொறுப்பில் இருந்து நரேந்திர மோடி விலக வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2003ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. குஜராத்தையே உலுக்கிய இந்த கலவரம் முழுமையாகக் கட்டுக்குள் வரவே கூட சில வாரங்கள் ஆனது. அதிகாரப்பூர்வமாகவே இந்த கலவரத்தில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த கலவரம் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருமாவளவன் பேட்டி
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியா முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல் திட்டங்களை வரையறுத்து இயங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியை திணிப்பதற்கும், சமஸ்கிருதமயமாதலை தீவிரப்படுத்துவதற்கும் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு வேலை செய்து வருகிறது.
ஆட்சி மொழி
பிராந்திய மொழி பேசக் கூடியவர்களை இந்தி பேசக் கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலே செயல்பட்டு வருவது மிக மோசமான போக்காகும். இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் மொழி மட்டும் அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். தமிழுக்கு மட்டும் நாம் கோரிக்கை விடுக்கவில்லை . இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
பதவி விலகுக
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை, வெறியாட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தனது குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மோடி விலக வேண்டும்.
தமிழில் மொழிபெயர்ப்பு
எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார், வன்முறையை தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கிறது.பிபிசியையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம்.
ஒரே தேர்தல் ஒரே தேசம்
ஒரே தேர்தல் ஒரே தேசம் என்ற முழக்கத்தை பாஜகவினர் முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் மிகவும் ஆபத்தான அரசியல் என்பதால் தான் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் ஓங்கி உரத்து முழங்கி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்ப பெற வேண்டும். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பது நல்லதல்ல. தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் முரணாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.