என்னாது.. இணைய முடியாதா.. "நிரூபிச்சிட்டீங்களே எடப்பாடி.." வெடித்து பேசிய டிடிவி தினகரன்
சென்னை: திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் நான் கூறினேன், இணைய முடியாது என கூறியதன் மூலம் ஜெயலலிதாவின் தொண்டன் இல்லை என எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருந்தேன். மேலும் மெகா கூட்டணி குறித்து எடப்பாடி கூறியிருந்ததால் அமமுக தயார் என கூறியிருந்தேன்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இணைய முடியாது என கூறியதன் மூலம் ஜெயலலிதாவின் தொண்டன் இல்லை என்பதை அவர் நிரூபித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.

பிரதமரை தேர்வு செய்வதில் அணில்
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக அணிலை போல் செயல்படும். அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. அக்கட்சி தலையில்லாத முண்டம் போல் உள்ளது. மெகா கூட்டணி என்பவர்களள், அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் நான் கூறினேன். கால் சதவீதம் அல்ல , அரைக்கால் சதவீதம் கூட பழனிசாமியுடன் கூட்டணிக்குச் செல்வேன் என்று நான் எங்கேயும் கூறியது இல்லை. மெகா கூட்டணி என்ற வார்த்தையை சொல்கிறார். அந்த கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கு படிவங்களைக் கூட அதிமுகவால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.

அண்ணாமலை
இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆமோதித்தார். அதிமுக பெரிய கட்சி என்பதால் அந்த கட்சியின் தலைமையில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என அண்ணாமலையும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த மெகா கூட்டணி குறித்த கேள்வி டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் முன் வைத்தனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணி
அதற்கு அவர் திமுகவை வீழ்த்த அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய தயார் என கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தினகரனை சேர்க்க முடியாது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் அதில் தினகரன் ஒரு சதவீதம் கூட இடம் பெற வாய்ப்பில்லை என கூறியிருந்தார்.

ஐஜேகே
எடப்பாடி பழனிசாமியை ஐஜேகே கட்சியின் நிர்வாகி ரவி பச்சமுத்து திடீர் சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த ஐஜேகேவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் எம்பியானார். இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போகிறது. அது போல் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications