வெறுமனே பேட்டி..நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க...டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்குப் போதுமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. திறந்திருக்கும் சில கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி இழுத்தடிப்பு செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் திடீர் மழையால் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முளைக்கிற பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது

கொரோனா காலத்தில் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு இடையில் விளைவித்திருக்கிற நெல், தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் வீணாகிப்போவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 'நெல் கொள்முதல் சரியாக நடக்கிறது' என்று ஆட்சியாளர்கள் வெறுமனே பேட்டி கொடுத்துவிட்டால் மட்டும் விவசாயிகளின் கஷ்டம் தீர்ந்துவிடாது.
எனவே, நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகம் திறப்பதுடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தின் அளவையும் அதிகப்படுத்த தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை நாட்கணக்கில் காத்திருக்க வைக்காமல் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications