ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுக்க... டிடிவி தினகரன் புது அசைன்மெண்ட்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை நேற்று அறிவித்தது முதல் அவரது மன்ற நிர்வாகிகள் பலர் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இனியும் இந்த பாதை நமக்கு தேவையா என்கிற வகையில் ரஜினி மன்ற நிர்வாகிகள் தங்களுக்குள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை அப்படியே தங்கள் கட்சிக்கு இழுத்து வர அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புது அசைன்மெண்ட்டை கையில் எடுத்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. மக்களே போதும்.. டிடிவி தினகரன் நம்பிக்கை
சுணக்கம்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளில் சுணக்கம் இருந்து வந்தது. மேலும் டிடிவி தினகரனும் கடந்த 6 மாதகாலமாக அரசியலில் பெரிய ஈடுபாடு கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த நிலைப்பாட்டில் மிகுந்த மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது. அமமுகவுக்கு புதிய அலுவலகம், புதிய உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சி அதிருப்தி பிரமுகர்களை தன் வசம் இழுப்பது என பல அஜெண்டாக்களை கையில் எடுத்திருக்கிறார் தினகரன். மேலும், அவரது செயல்பாடுகளிலும் உற்சாகம் தெரிகிறது.
உறவினர்கள்
டிடிவி தினகரனை சசிகலா எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்பதால் அமமுக நிர்வாகிகள் புதிய பாய்ச்சலுடன் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் எடுத்த இரட்டை நிலைப்பாடு காரணமாக அவர் மீது அதிருப்தியில் உள்ள அவரது மன்ற நிர்வாகிகளை வளைக்க அமமுக நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையுமா என்பது சந்தேகமே. சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அமமுக சார்பில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும் என்பதே தினகரனின் முதல் டார்கெட்டாம்.
தினம் தோறும்
இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும், கட்சியை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் மாவட்டச் செயலாளர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளார் தினகரன். சென்னை ராயப்பேட்டையில் புதிய அலுவலகம் திறந்துவிட்டதால், இனி சென்னையில் இருந்தால் கருணாநிதி, ஸ்டாலின் பாணியில், தினம் தோறும் கட்சி அலுவலகத்திற்கு வர உள்ளாராம் தினகரன். தினமும் நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது என இனி பயங்கர பிஸியாக இருக்கப்போகிறாராம்.
நம்முடன்
தினகரனின் திடீர் உற்சாகம் பற்றி அமமுக மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ''சின்னம்மா விரைவில் வெளியே வரப் போறாங்க, அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை டிடிவி சார் சத்தமின்றி செய்து வருகிறார். அவங்க வெளியே வந்தவுடன் எங்களுடன் தான் இருக்கப்போறாங்க. அப்போது அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் சின்னம்மா பக்கம் வரக்கூடும். இப்படி பல மாற்றங்கள் நிகழவுள்ளதால் எங்கள் முகாம் உற்சாகத்தில் இருக்கிறோம்'' எனக் கூறினார்.