மூளையில்லா சங்கி.. அடிமை அதிமுக! மோடிக்கே கிளாஸ் எடுத்தவர் நம்ம தலைவர்! அதிர வைத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்த போது, அவரை மேடையிலேயே வைத்து இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று கிளாஸ் எடுத்தவர் நம்முடைய தலைவர் ஸ்டாலின் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், "திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. அதுவும் கலைஞரின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். அவருடைய எண்ணம் தான் நம்மை இன்னும் வழிநடத்தி செல்வதாக நினைக்கிறேன். ஒரு தாத்தாவாக எனக்கு நேரம் ஒதுக்கியவதை விட நம்முடைய தலைவராக அவர் எனக்கு நேரம் ஒதுக்கியது தான் அதிகம்.

கலைஞர் கருணாநிதி
சாமானிய மக்கள் தொடங்கி மாபெரும் தலைவர்கள் வரை அவர்களுக்கான தனது நேரத்தை கலைஞர் கருணாநிதி ஒதுக்கியிருக்கிறார். அதிமுகவினரை போல் அடிமையாக இருக்காதீர்கள் , சங்கிகளைப் போல மூளை இல்லாதவர்களாக இருக்காதீர்கள். மூளை இருந்தும் யார் யாரோ சொல்வதைக் கேட்டு இருக்கக்கூடாது .அடிமை ஆதிக்கம் கூட்டத்தை நாம் என்ன செய்கிறோம் என்று கோ பேக் என கூறுகிறோம், இந்தி தெரியாது போடா என்று விரட்டி அடிக்கிறோம், ஒற்றை செங்கலை எடுத்து காட்டி எங்கே எய்ம்ஸ் என கேட்கிறோம்.

திமுகவின் துணிச்சல்
இந்த துணிச்சல் முத்தமிழ் அறிஞர் கலைஞர், தந்தை பெரியாரிடம் இருந்து வந்தது. இன்று பலபேர் திராவிட மாடல் ஆட்சி குறித்து விளக்கங்கள் என்று கேட்கிறார்கள் . திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து நான் ஒரு சிறிய விளக்கத்தை சொல்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார். மோடி அவர்களையே மேடையில் வைத்து விட்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மேடையிலேயே கிளாஸ் எடுத்தவர் நம்முடைய தலைவர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ஒரே முதல்வர் ஸ்டாலின்
நம்முடைய மாநிலத்திற்கு என்னென்ன தேவை என்னென்ன தேவை இல்லை என்பதை மோடியை வைத்துக் கொண்டு அவரிடமே தைரியமாக கிளாஸ் எடுத்த இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தலைவர் ஸ்டாலின். இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வர் என்ற பெயரை அவர் எடுத்து இருக்கிறார் ஆனால் அவர் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழகம் ஆக்க வேண்டுமென என கூறி வருகிறார். அவருடைய வழியிலே அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்." என பேசினார்.












Click it and Unblock the Notifications