80 சதவீத இந்திய மக்களை கொல்லணும்னு சொன்னேனா? பொய் செய்தியை பரப்பாதீர்.. பாஜகவுக்கு உதயநிதி கண்டனம்
சென்னை: டெங்கு, மலேரியா, கொரோனா மாதிரி சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில் இந்தியாவில் சனாதனத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்யலாம் என்கிறார் என பாஜக நிர்வாகி அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று சனிக்கிழமை சனாதன ஒழிப்பு மாநாடு நடந்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் இந்த மாநாட்டின் தலைப்பே என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதை போலதான் இந்த சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டியது.
சனாதனம்னா என்ன, சனாதனம் என்ற பெயரோ சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சனாதனம் என்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாறாது என்று பொருள். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும் கம்யூனிச இயக்கமும்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது 5 வயது முதல் 95 வயது வரை சனாதனத்தை எதிர்த்து போரிட்டார் என தெரிவித்தார். இந்த மாநாட்டில் உதயநிதி பேசுகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று பங்கேற்றோம். 2000 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை திராவிட கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம். சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்டுவோம் என பேசியிருந்தோம். சனாதனம் வீழட்டும் திராவிடம் வெல்லட்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஸ்வகர்மா திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தோல்வியை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவரது பேச்சுக்கு அமித் மாளவியா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மலேரியா, டெங்குவுடன் சம்மந்தப்படுத்தி பார்க்கிறார். சனாதனத்தை எதிர்க்க கூடாது, ஒழிக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்வது இந்தியாவில் சனாதனத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்கிறார். எதிர்க்கட்சியில் முக்கிய கட்சியாக இருப்பது திமுக. மேலும் காங்கிரஸுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகிறது. மும்பை எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இதுதான் பேசப்பட்டதா என கேள்விஎழுப்பியிருந்தார்.
இதற்கு உதயநிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் சனாதனத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என நான் எப்போதும் சொன்னதில்லை. சனாதனம் எனும் கொள்கை மக்களை ஜாதி, மத ரீதியில் பிரிக்கிறது. அதை வேரோடு அழித்தால்தான் மனிதத்தையும் சமஉரிமையையும் நிலை நாட்ட முடியும். நான் பேசியதில் நான் உறுதியாக இருக்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருந்து பேசியுள்ளேன். சனாதனம் குறித்து ஆய்வு செய்து அது சமூகத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என பெரியார், அம்பேத்கரின் கட்டுரைகளை காண்பிக்க தயாராக உள்ளேன்.
நான் பேசியதை திரும்பமும் சொல்கிறேன். கொரோனா, டெங்கு, மலேரியா போல் சனாதனம்தான் சமூக அவலங்களுக்கு பொறுப்பு. நீதிமன்றத்தில் நான் சந்திக்கவும் தயாராக உள்ளேன். தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என உதயநிதி பதிலடிக் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications