சினிமாத்தனமாக இருக்கிறதே.. நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம் பேச அனுமதித்தது ஏன்? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில், இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், பேசுவதற்கு எந்த சட்டத்தின் கீழ் அனுமதி அளித்தார்கள் என்பது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக நக்கீரன் வார இதழில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக, ஆளுநர் மாளிகையை அளித்த புகாரைத் தொடர்ந்து, நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த அக்டோபர் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
124வது சட்டப்பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டப் பிரிவு, இந்த கட்டுரை விவகாரத்திற்கு பொருந்தாது என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது.
விசாரணை
எழும்பூர் 13வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது நக்கீரன் கோபாலை சந்திக்க நீதிமன்றத்திற்கு, என்.ராம் வந்திருந்தார். அவரிடம் நீதிபதி கருத்து கேட்டபோது, இந்த கைதுக்கு எதிராக நீதிபதி முன்னிலையில் கருத்தை பதிவு செய்தார் ராம். இந்த நிலையில், நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, சென்னை காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது நபர்
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார். அப்போது, எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கிற்கு, சம்பந்தமில்லாத மூன்றாவது நபரான ராம், கருத்தை கூற அனுமதிக்கப்பட்டது. இதை நீதிபதி பதிவு செய்தார் என்று குறிப்பிட்டார்.
சினிமாத்தனம்
இதற்கு ஹைகோர்ட் நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். மூன்றாவது நபர் நீதிமன்றத்தில் கருத்து கூறுவதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக நீதிமன்றத்தை மாற்றக்கூடாது. இந்த செயல் என்பது சினிமாத்தனமாக உள்ளது. வருங்காலத்தில் இது போன்று நடக்க கூடாது என்றார், நீதிபதி.
எந்த சட்டம்
மேலும், எந்த சட்டத்தின் அடிப்படையில் ராம் கருத்து பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து வரும் 28ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.