"படிக்காத தலைவர்கள்.." ஜே.பி.நட்டா சொன்ன அந்த வார்த்தை... கடும் கோபத்தில் திமுக! நறுக் கேள்வி
சென்னை: தமிழகம் வந்துள்ள ஜே.பி.நட்டா திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், அதற்கு திமுக மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்து உள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இப்போது இரு நாட்கள் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். நேற்று மதுரை சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
நேற்று பல துறை சார்ந்த வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து கூறிய கருத்துகள் ஒரு பக்கம் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது.

நட்டா
அதேபோல நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். வாரிசு அரசியல், பண மோசடி, கட்ட பஞ்சாயத்து என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைச் சாடும் வகையில், "படிக்காதவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இப்படித்தான் நடக்கும்" என்று விமர்சித்தார்.

திமுக பதிலடி
இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கல்வித் தகுதியைக் கேட்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம் என்று திமுக பதிலடி கொடுத்து உள்ளது. மேலும், வாரிசு அரசியல் விவகாரத்திலும் அது பதிலடி கொடுத்து உள்ளது. பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா யார் அவர் கிரிக்கெட்டில் எத்தனை சதங்களை அடித்துள்ளார் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

வாரிசு அரசியல்
ஜேபி நட்டா தனது பேச்சில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளதாகப் பட்டியலிட்டார். மம்தா, சந்திரசேகர ராவ், ஜகன் மோகன் ரெட்டி என பலரையும் அவர் சாடினார். நட்டா மேலும் கூறுகையில், "காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பிராந்திய கட்சிகள் அனைத்தும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன. அதற்கு எதிராகத் தான் நாங்கள் போராடுகிறோம்.

வெறுப்பு வாதம்
பாஜக சித்தாந்த அடிப்படையில் மட்டுமே தேசியக் கட்சி. இருப்பினும், அது ஒவ்வொரு பிராந்திய நலனினும் அக்கறை கொண்டே செயல்படும்" என்று அவர் தெரிவித்தார். அத்துடன் நிற்காமல் திமுக வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே பரப்புவதாகவும் அவர் சாடியிருந்தார். இதற்கும் திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் பதிலடி கொடுத்து உள்ளார்.

நிராகரிப்பார்கள்
இது குறித்து சரவணன் கூறுகையில், "வெறுப்பு மற்றும் பிரிவினையின் தலைவனே பாஜக தான். அந்தக் கட்சி தான் மக்களிடையே வெறுப்பைப் பரப்பி வருகிறது. இது தான் பாஜகவின் உண்மையான முகம். இது அனைவருக்கும் தெரியும். மேலும், பாஜக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத் தவறிவிட்டது. தமிழக மக்கள் புத்திசாலிகள். 2024இல் அவர்களை முற்றிலுமாக நிராகரிப்பார்கள்" என்று பதிலடி கொடுத்து உள்ளார்.

தமிழகத்தில் பாஜக
தமிழகத்தில் பாஜக இன்னும் வலுவான ஒரு இடத்தை பிடிக்கவில்லை. இதற்காக அவர்கள் தொடர்ச்சியாகப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் ஒரு முயற்சியாகவே அவர் இப்போது தமிழகம் வந்துள்ளார். இதில் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கும் நட்டா, கட்சியை வளர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.












Click it and Unblock the Notifications