தலைவர்கள் உயிருடன் இல்லாதபோதுதான் பதவி காலியாகும்.. ஹைகோர்ட்டில் ஒபிஎஸ் தரப்பு பரபர வாதம்
பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் பதவிகள் எப்படி காலியாகும் என பன்னீர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலியாகும். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்த போதுதான் தலைவர் பதவி காலி என்ற நிலை உருவானது. பொதுக்குழு,சிறப்பு பொதுக்குழு என எதுவாக இருந்தாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுகவில் கட்சித்தலைமைக்கான அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை நேற்றைய தினம் முதல் விசாரித்து வருகிறார்.

பதவிகள் காலாவதியா?
நேற்றைய விசாரணையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளிவைத்தார்.

வழக்கு விசாரணை
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது எடப்பாடி பழனிசாமி தனது பதில் மனுக்களை தாக்கல் செய்து வாதிட்டது. அதில், நீதிமன்றம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட எந்த கூட்டத்துக்கும் நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டதில்லை. தற்போது வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் கட்சி அலுவலகத்தால் விநியோகப்பட்டவை. இந்த வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை.2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அவர் தனது வாதத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த வாதம் தவறானது.

கட்சியின் நலன்
ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி காலியாகும். கட்சி விதியில் திருத்தம் செய்த தீர்மானத்தை முன்வைக்காத நிலையில் கட்சி பதவிகள் எப்படி காலியாகும். கட்சியின் நலன் கருதியே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.
Recommended Video

பதவி எப்போது காலியாகும்
தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலியாகும். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்த போதுதான் தலைவர் பதவி காலி என்ற நிலை உருவானது. பொதுக்குழு,சிறப்பு பொதுக்குழு என எதுவாக இருந்தாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும். பொதுக்குழு ஒப்புதல் என்பது சம்பிரதாயம்தான். பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் பதவிகள் எப்படி காலியாகும் என பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பது தவறு. முதல்வராக இருந்த அவர் பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications