தடுப்பூசி போடாவிட்டால் ஈஸியாக ஓமிக்ரான் பாதிக்கும்... முதியோருக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவும் பட்சத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று ஈஸியாக, ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
தற்போது 70 நாடுகளுக்கு பரவி உள்ள ஓமிக்ரானால் பாதிப்புகள் அதிகம் இல்லை என்றாலும் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
100 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அதில் 10 சதவீதம் பேருக்கு தீவிர தொற்று ஏற்படும் என்பதால் உடனடியாக தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் ஓமிக்ரான்
இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், உலகையே அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியா உட்பட 70 நாடுகளில் பரவி உள்ளது. நம் நாட்டில் 40க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் லேசான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் வேகமாக பரவக்கூடிய தன்மை உள்ளது என தெரிவித்தார். மேலும் கோவிட் தடுப்பூசி போட்ட ஒரு சிலருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த செல்வ விநாயகம், தமிழகத்தில் ஓமிக்ரான் பரவா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

60 வயதை கடந்தோர் தடுப்பூசி போடவில்லை
தமிழ்நாட்டை பொறுத்தவரை 82.08 சதவீதம் மக்கள் தடுப்பூசியின் முதல் தவணையும், 51.87 சதவீதம் பேர் இரண்டு தவணைகளையும் போட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவித்த டாக்டர் செல்வவினாயகம், தமிழக மக்கள் தொகையை பொறுத்த அளவில் இது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், 60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என தெரிவித்தார்.

குறைவாக போட்டுள்ளார்கள்
மூத்த குடிமக்களில் முதல் டோஸ் போட்டவர்கள் 57 சதவீதம், இரண்டு டோஸ் போட்டவர்கள் 39 சதவீதம் மட்டுமே என தெரிவித்த சுகாதாரத்துறை இயக்குநர் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவினால் தடுப்பூசி போடாத மூத்த குடிமக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை என்பதால் தனக்கு பரவாது என மூத்த குடிமக்கள் நினைக்கக் கூடாது என எச்சரித்தார். நீங்கள் வெளியில் செல்லாவிட்டாலும் மற்றவர்கள் மூலமாக வைரஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக அதாவது வைரஸ் உங்கள் வீட்டை தேடிவரும் என்று தெரிவித்தார்.

ஓமிக்ரான் வேகமாக பரவும்
உதாரணத்திற்கு 100 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அதில் 10 சதவீதம் பேருக்கு தீவிர தொற்று ஏற்படும் என்றும் இது வேகமாக பரவும் என்பதால் 100 பேர் மூலம் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் ஆயிரம் பேருக்கு தீவிர தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். எனவே அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது சுகாதாரத்துறைக்கு ஒரு சவாலாக இருக்கும். எனவே தடுப்பூசி போடாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், இரண்டாவது தவணைக்கு காத்திருக்கும் 94 லட்சம் பேரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய செல்வ விநாயகம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications