வடபழனி முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு...பக்தர்களுக்கு அனுமதியில்லை - நேரலையில் தரிசனம்
வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுகளை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நாளை பொதுமக்கள் அனுமதியின்றி குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நாளை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.
இந்த கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

புண்ணிய தீர்த்தம்
இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

யாகசாலை பூஜைகள்
வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடக்க உள்ளன. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.

நேரலையில் தரிசனம்
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி
கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் வடபழனி முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் இன்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மற்றும் கோவிலுக்கு வர வேண்டாம். குடமுழுக்கு யூட்யூபில் நேரலை செய்யப்டும், அதனை பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்து பார்க்கலாம்.

மண்டல பூஜை 48 நாட்கள்
இந்தியாவில் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டுவரும் நீர் இந்த விழாவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த திருக்கோயிலில் நாளை அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பிறகு பொதுமக்கள் வழக்கம்போல் கோயிலுக்கு வரலாம். குட முழுக்கு முடிந்து முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெற இருக்கிறது. எனவே தமிழக அரசு விடுத்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் வீட்டில் இருந்தே இதனை பார்த்து கொள்ள வேண்டும். திங்கள்,செவ்வாய், புதன், ஆகிய நாட்களுக்கு தரிசனம் மட்டும்தான் பூஜைகள் கிடையாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications