கல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..!
சென்னை: தமிழ் கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக் கொணர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மிகக் குறைவான கல்வெட்டுகள் உள்ள சமஸ்கிருத மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட, தமிழ் மொழிக்குக் கொடுக்காமல் இருப்பது மத்திய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார்.
மேலும், இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டிற்கு எதிராக.. மோடி அரசின் 'வஞ்சகமும், துரோகமும்' தொடர்கிறது.. வைகோ சுளீர்
உலக அளவில்
"உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டுக்கு மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த தொல்லியல் துறை, ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் உள்ளன. மேலும், 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
11,000 கல்வெட்டுகள்
இதுவரை, 11,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது. அரசு உரிய கவனம் செலுத்தி இந்தக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வெளிக் கொணர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. வேலை ஆட்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போய் உள்ளது.
74,000 கல்வெட்டுகள்
கண்டெடுக்கப்பட்ட 74,000 கல்வெட்டுகளைப் பிரதி எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல் வடிவில் வெளிவரவில்லை. தற்போது தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், ஒரு பதவி கூட கல்வெட்டுத் துறைக்கு ஒதுக்கப்படவில்லை. தேசிய அளவிலும், உலக அளவிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ள அர்ப்பணிப்புள்ள தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்னர்.
மைசூரில் தமிழ்
மைசூரில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில், மைசூரில் தமிழுக்கு நான்கு ஆய்வாளர்களும், சமஸ்கிருதத்துக்கு ஏழு ஆய்வாளர்களும் பணிபுரிகின்றனர். தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அங்கும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
வேண்டுகோள்
கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் புரிந்து, வரலாற்றோடு இணைத்து நூல் வடிவில் வெளியிடும் திறமை கொண்டவர்கள் அருகி வருகின்றனர். இக்காலகட்டத்தில் போர்க்கால நடவடிக்கையில் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தமிழ் கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக்கொணர வேண்டும்.
முக்கியத்துவம்
மிகக் குறைவான கல்வெட்டுகள் உள்ள சமஸ்கிருத மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட, தமிழ் மொழிக்குக் கொடுக்காமல் இருப்பது மத்திய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயலாகும். எனவே, மத்திய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாகத் தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".