வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு : பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கோவிந்தா முழக்கம்
வைகுண்ட ஏகாதசி விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
சென்னை: வைகுண்ட ஏகாதசி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக இன்று காலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு அதிகாலையில் சிறப்பு தரிசனம் செய்தார். சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல மயிலாப்பூரில் உள்ள மாதவப்பெருமாள் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் 59 வது திவ்யா தேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார். அப்போது கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்
வைகுண்ட ஏகாதசி கதை: அசுரர்கள் கேட்ட வரம்...சொர்க்க வாசல் திறக்க சம்மதித்த மகாவிஷ்ணு
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் உள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. ரத்தின அங்கியில் பெருமாள் பரமபதவாசலில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.
கொரனோ பரவல் காரணமாக சொர்க்கவாசலை பெருமாள் கடக்கும் போது பக்தர்கள் உடன் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து பெருமாளை வணங்கினர்.தொடர்ந்து மண்டபத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.