அந்த 600 பேர்.. முன்னாடி அனுப்பிட்டாங்க.. பிரச்சனையே அதனால்தான் - வைத்திலிங்கம் பகீர் குற்றச்சாட்டு!
சென்னை : ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லாத 600 பேர் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம்.
நாங்க இருக்கோம்! ஒரு கை பாத்துருவோம்! தந்தைக்காக களமிறங்கிய 'தனயன்கள்.. சூடுபிடித்த அதிமுக ரேஸ்.!
பொதுக்குழு கூட்டம்
ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷம் கடுமையாக எழுந்த நிலையில், மீண்டும் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனடியாக வெளியேறினர். மேலும், இந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூலை 11ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை நடத்த முடியாது என்றும் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை நடத்தியே தீருவது என முடிவோடு இருக்கின்றனர்.
600 பேர்
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து வைத்திலிங்கம் பேசுகையில், "ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போவதற்கு முன்பே காலை 6 மணிக்கு பொதுக்குழுவில் இல்லாத நபர்கள் சுமார் 600 பேரை பொதுக்குழுவில் முன்னால் உட்கார வைத்து விட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லாத 600 பேர் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது.
கூச்சல் போட்டனர்
பொதுக்குழு உறுப்பினர்களாகவே இல்லாமல் முன்னால் அமரவைக்கப்பட்டவர்கள் தான் கூச்சல் போட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் யாருமே ஒரு வார்த்தையும் பேசவில்லை. உட்கட்சி ஜனநாயகத்திற்குப் புறம்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கட்சியின் கண்ணியம், கட்டுப்பாட்டை காக்காமல் பொதுக்குழுவை நடத்தினர்.
திரும்பி வருகின்றனர்
நீதிமன்றம் சொன்ன அறிவுரையை கேட்காமல் பொதுக்குழுவை நடத்தியதும், புதிய அறிவிப்பை வெளியிட்டதும் தவறு என்று சொல்லிவிட்டு நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்ற பலர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
செல்வாக்கு அதிகரிப்பு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு கூடியிருக்கிறது. மதுரை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது" என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.