அண்ணல் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு திருமா நன்றி.. நெகிழ்ச்சி பதிவு..!
சென்னை: ஆந்திர மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டியுள்ள அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என பட்டியலின அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அதன்படி ஆந்திரப் பிரதேச அரசு கடந்த மே 18ம் தேதி மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஜெகன் அதிரடி! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. பெரும் எதிர்ப்பை மீறி பறந்து வந்த உத்தரவு!
வெடித்த வன்முறை
ஆனால் அண்ணல் அம்பேத்கர் பெயர்சூட்ட அப்பகுதியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென இந்த கண்டன ஊர்வலம், போராட்டமாக மாறியது. போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. அதில் ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ்குமார் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 144 தடை அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஏராளமான கைது செய்யப்பட்டனர். குறிப்பாக வன்முறைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெயர்மாற்றம்
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்காக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு கருத்து
இதுகுறித்து ஆந்திர அரசின் ஆலோசகரான ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில், மக்கள் தொகை மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த பின் மாவட்டத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. அதன்படி அதிகாரப்பூர்வமாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மறுபெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பாராட்டு
ஆந்திர மாநிலத்தில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்துள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.