பிறந்த நாளில் மறைந்த 2 திமுக தலைவர்கள்.. ஜெ அன்பழகனை தொடர்ந்து வீரபாண்டி ராஜா மரணம்
சென்னை: பிறந்த நாளிலேயே சேலம் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ராஜா இன்று உயிரிழந்துள்ளார். இதேபோல் ஏற்கனவே சென்னை திமுகவின் முக்கிய தலைவரான ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். திமுகவின் இரண்டு முக்கிய தலைவர்கள் பிறந்த நாளில் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. ஆனால் அந்த மரணம் அவர்கள் பிறந்த நாளிலேயே வந்தால் அதைவிட சோகம் அந்த குடும்பத்துக்கு வேறு எதுவும் இல்லை.
அப்படி ஒரு சோகத்தை திமுகவைச் சேர்ந்த ஜெ அன்பழகனின் குடும்பமும், வீரபாண்டி ராஜாவின் குடும்பம் சந்தித்து உள்ளது. ஒருவர் கொரோனா காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்புகளாலும். இன்னொருவர் மாரடைப்பாலும் மரணத்தை தழுவி உள்ளார்கள்.

கட்சி தலைமை
முதலில் ஜெ அன்பழகன் அவர்களை பற்றி பார்ப்போம். திமுகவின் அடிமட்ட தொண்டராக வலம் வந்து, படிப்படியாக வளர்ந்து சென்னையில் முக்கியமான திமுக தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெ.அன்பழகன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக எதையும் செய்யக்கூடியவராக இருந்தார். கருணாநிதி மீது அளவுக்கு கடந்த பாசம் வைத்திருந்தவர். இதனால் தான் என்னவோ, கருணாநிதி , 1996 முதல் 2011 வரை 20 ஆண்டுகள் தான் எம்எல்ஏவாக சேப்பாக்கம் தொகுதியில் ஜெ.அன்பழகனை போட்டியிட வைத்தார். அதற்கு பதில் தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார்.

கொரோனாவால் மரணம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவரானார். ஸ்டாலின் மீது அதிக அன்பு காட்டி வந்த ஜெ அன்பழகன், கொரோனா காலத்தில் ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண பணிகளை முழு வீச்சில் செய்தார். ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவும் சரி, எதிர்கட்சியாக இருந்த திமுகவும் சரி, கொரோனாவை கண்டு பயப்படாமல் மக்களை தேடி சென்று நிவாரண உதவிகளை வழங்கினர். அப்படி ஒரு முறை திருவல்லிக்கேணியில் நிவாரண உதவி வழங்கிய போது தான், ஜெ அன்பழகன் மற்றும் அவருடன் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று தீவிரமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், தீவிரமான பாதிப்பால் ஜெ அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதாவது அவர் பிறந்த நாள் ஜூன் 10ம்தேதியாகும். அதே நாளில் 2020ம் ஆண்டு உயிரிழந்தார்.

மயங்கி விழுந்து மரணம்
வீரபாண்டி ராஜாவுக்கு இன்று பிறந்த நாள். பிறந்த நாளை கொண்டாடும் சந்தோஷத்தில் இருந்தவர், தந்தையின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சேலத்தில் திமுக என்றால் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் முதலில் ஞாபகம் வரும். சேலத்து சிங்கம் என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம். சேலத்தில் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக விளங்கியவர். கடந்த 2012ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார்.

சோகம்
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59. பிறந்த நாளே இறந்த நாளாக மாறியதால் திமுகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications