தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. முன்வந்த அண்ணாமலை.. இன்புளூயன்சா பரவலை தடுக்க வேண்டுகோள்!
சென்னை : புதிய தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், நாம் அனைவரும் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலுடன் வரும் குழந்தைகள்
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "H1, N1 இன்ப்ளுவன்சா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பாஜக சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்க தயார்
இன்புளுவன்சா H1, N1 வைரஸ் பாதிப்பினால் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மருத்துவ முகாம்கள்
வைரஸ் H1, N1 இன்ப்ளுவன்சா பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும், H1, N1 இன்ப்ளுவன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அண்ணாமலை கடிதம்
நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டு பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்க்க மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன், அனைவரும் இணைந்து அரசுடன் இணைந்து புதிய வைரஸ் தாக்குதலை முறியடிப்போம்" என அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications