ஆரஞ்சு அலர்ட்! இன்றும் தமிழ்நாட்டில் கனமழை வெளுக்க போகிறது! எங்கெல்லாம் பெய்யும்? வானிலை ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்து வருகிறது. முதலில் தென் மாவட்டங்களில் தொடங்கிய கனமழை தற்போது தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்து வருகிறது.
நேற்று வடமாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது.
மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.

கனமழை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்பு தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

ஆரஞ்ச் அலர்ட்
தற்போது அது ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தமாக ராஜஸ்தான், குஜராத் பகுதி, கடலோர & தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது போக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், துணை-இமயமலை மேற்கு வங்காளம் & சிக்கிம், ஒடிசா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அசாம் & மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் & திரிபுரா, குஜராத் பகுதி, மராத்வாடா, விதர்பா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரவு மழை கொட்டித்தீர்த்தது.

மழை
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலையில் இருந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது.












Click it and Unblock the Notifications