"ஆபத்து".. 1918 பேரழிவு போல வந்தாலும் வரலாம்.. "செகண்ட் வேவ்" குறித்து வெதர்மேன் வார்னிங்!
வெதர்மேன் பிரதீப்ஜான் புதுவைரஸ் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: கொரோனா 2வது அலை ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங் தந்துள்ளார்.. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரிலும் பதிவு செய்துள்ளார்.
கடந்த வருடம் இதே மாதம், இந்தியா என்ற நாடு அல்லோலப்பட்டது... நோயும் புதுசு, வீரியம் புதுசு, மருந்தும் இல்லை, ஆராய்ச்சியும் முழுதாக முடியவில்லை, தினந்தோறும் செத்து மடியும் மக்கள், என பீதியின் பிடியில் மொத்த நாடும் சிக்கி கொண்டிருந்தது.
தடுப்பூசி தந்த நம்பிக்கையுடன், அரசின் மிக தீவிரமான நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு காரணமாக மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சமயத்தில், ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னை தானே தகவமைத்துக் கொண்ட இன்னொரு புதிய வைரஸ் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மரபியல் மாற்றம்
உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் சொல்கிறார்கள்.. இதனால், உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. பொதுமக்கள் மீண்டும் கிலியில் சிக்கி உள்ளனர்.. இதனிடையே, வேரியண்ட்டுகளுடன் தொடர்பில்லாத, மரபியல் ரீதியாக மாற்றம் பெற்ற கொரோனா தொற்றானது, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு Double Mutant Variant என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
உருமாற்றம்
உருமாற்றம் அடைந்த அந்த 2வது அலைக்கும், இந்த புதிய தொற்றுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றும் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, இந்தியாவின் பல மாநிலங்களில் சமீப காலமாக தொற்று மறுபடியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது... தினமும் 800, 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதில் முன்பை போலவே, மகாராஷ்டிரா நிலை படுமோசமாக உள்ளது.
சுகாதாரத்துறை
அதிக அளவில் பாதிப்பு இந்த மாநிலத்தில் இருக்கிறது. எனினும், அந்தந்த மாநில மக்களை சுகாதாரத் துறையினர் போதுமான விழிப்புணர்வு தந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் வெதர்மேன் என்று சொல்லப்படும் பிரதீப் ஜான் ஒரு வார்னிங் ட்வீட் போட்டுள்ளார்.. பிரதீப் ஜான் ஒரு போஸ்ட் போடுகிறார் என்றாலே அதை அசால்ட்டாக எடுத்து கொள்ள முடியாது..
ஆபத்து
அந்த வகையில் தன்னுடைய ட்வீட்டில், "இந்தியாவில் விரைவில், ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்... 1918ம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோயாக இருந்தாலும் சரி, அல்லது பிரேசிலில் சமீபத்திய 2வது அலையாக இருந்தாலும் சரி... 2வது அலைகள் எப்போதும் ஆபத்தானதாகவே இருந்துள்ளது. இதற்குக் காரணம் சமூக விலகலை மக்கள் புறக்கணிப்பதே. எனவே கவனமாக இல்லாவிட்டால் ஆபத்து" என்று பதிவிட்டுள்ளார்.