லேட் பண்ணதால வந்த வினை.. போற வழியெல்லாம் பொத்தென்று விழும் "கேட்.." தவிக்கும் ரஜினிகாந்த்!
சென்னை: அப்போ, இப்போ என்று ஒரு வழியாக.. நீண்ட பல காலத்துக்குப் பிறகு.. கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இப்போது அவருக்கு ஆயிரம் சிக்கல்கள் எதிரே வந்து நிற்கின்றன.
புதிதாக கட்சி துவங்கி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் சில வாரங்கள் முன்பு பேட்டி அளித்தார். ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால், கட்சி நடைமுறை அவர் சொல்வது போல அத்தனை எளிதான விஷயம் கிடையாது.
எப்போதுமே, ரஜினிகாந்தின் செல்வாக்கை குறிப்பிட வேண்டுமென்றால்.. 1996 சட்டசபை தேர்தலை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுவார்கள்.
13 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- ஜன.19-ல் ஆஜராக ரஜினிக்கு விசாரணை ஆணையம் 2-வது சம்மன்
ரஜினிகாந்த் வாய்ஸ்
இதற்கு காரணம்.. "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என்று வாய்ஸ் கொடுத்ததுதான். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு புகார், சுதாகரனுக்கு நடந்த ஆடம்பர திருமணம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக இயல்பாக எழுந்து இருந்த பெரும் அதிருப்தி அலை மற்றும் ரஜினிகாந்த் வாய்ஸ் ஆகியவை இணைய.. திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
48 மணி நேரத்தில் கட்சி பதிவு
அப்போது, அத்தனை அதிருப்தி ஜெயலலிதா மீது இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த மூப்பனார், அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் மாநில காங்கிரசை வெறும் 48 மணி நேரத்தில் கட்சியாக பதிவு செய்து சைக்கிள் சின்னத்தை வாங்கினார். இதற்கு சட்ட ரீதியாக பெரிதும் உதவி செய்தது ப.சிதம்பரம். அப்போது தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.என்.சேஷன். சட்டத்திற்கு உட்பட்ட எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உடனே கை கொடுப்பவர் அவர். இதனால்தான் 48 மணி நேரத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது.
கட்சியை பதிவு செய்ய 6 மாதம் தேவை
இப்போது நிலைமை அப்படி இல்லை. ஆனால் ரஜினி ரசிகர்களைப் போலவே ரஜினிகாந்த் 1996 ஆம் ஆண்டுதான் இப்போதும் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்போது ஒரு கட்சியை பதிவு செய்ய ஆறு மாத காலம் தேவைப்படுகிறது. கட்சி தலைமை செயல்படும் இடம், கட்சியின் சட்ட திட்டம், கட்சிக்காக தாக்கல் செய்யப்படும் 100 பேரின் பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் சரிபார்க்க இவ்வளவு கால நேரம் தேவைப்படுகிறது.
காலக்கெடு கம்மி
ரஜினிகாந்த் இன்னமும் கட்சி ஆரம்பிக்காத நிலையில், ஏப்ரல் மாதத்துக்கு முன்பாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் 4 மாத காலத்திற்குள் கட்சியை பதிவு செய்து சின்னத்தை பெறுவது எப்படி என்பது மிகப்பெரிய சவால். இந்த நிலையில்தான் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு கட்சி பதிவு செய்யபட்டுள்ளது. அதற்கு சின்னமாக ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது.
புஸ்வானம்
இது ரஜினிகாந்த் பதிவு செய்த கட்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கடைசி நேரத்தில் புஸ்வானமாக மாறிப்போனது. ஏனெனில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் ஸ்டாலின் என்பவர் இந்த கட்சியை பதிவு செய்து வைத்துள்ளார். ஒருவேளை இந்த கட்சியை ரஜினிகாந்த் தன்வசப்படுத்த விரும்பினாலும் அதற்கு நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. என்ன என்று கேட்கிறீர்களா? முதலில் அந்தக் கட்சியில் ரஜினிகாந்த் உறுப்பினராக சேர வேண்டும், அதன்பிறகு கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அந்த கட்சியின் பொது செயலாளர் அல்லது தலைவர் என்ற அந்தஸ்துக்கு ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
எந்த நடவடிக்கையும் இல்லை
இதையெல்லாம் செய்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் அந்த தகவல்களை தர வேண்டும். அதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இப்படியான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஒருபக்கம் தமிழகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை தர ஆரம்பித்து விட்டன. தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் சொந்த கட்சி ஆரம்பித்ததாகவும் தெரியவில்லை, அவரது ரசிகர் மன்ற தலைவரான ஸ்டாலின் பதிவு செய்த கட்சியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்த மாதிரியும் தெரியவில்லை.
கட்சிக்கு எதிராக வழக்கு
தனது ரசிகர் மன்ற தலைவர் வைத்திருக்கும் கட்சியை ரஜினிகாந்த் எளிதாக கையகப்படுத்தி விடலாமே, இது ஒரு பெரிய விஷயமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் அங்கும் ஒரு சிக்கல் குபீரென்று எழுந்து நிற்கிறது. அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில், ஏற்கனவே ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் தங்க சண்முக சுந்தரம் என்பவர், ஒருவேளை ரஜினிகாந்த், மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கினால் தனது கட்சியின் பெயரை போலவே இருக்கும் என்பதால் வழக்கு தொடரப்போவதாக எச்சரித்துள்ளார். எனவே அந்த வாய்ப்புக்கும் பெரிய இடையூறு வந்துள்ளது.
ரஜினிகாந்த் ஓய்வு?
இப்படி போகிற இடமெல்லாம் கட்டையைப் போட்டால் ரஜினிகாந்த் என்ன செய்வார்? உங்க கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம், ஆளைவிடுங்கப்பா, என்று கடைசி நேரத்தில் மனிதர் ஓய்வு மோடுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.