நாட்டுக்கே முன்னோடி.. பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க கருணாநிதி செய்தவற்றை மறக்க முடியுமா?
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி, தமிழ் மக்களுக்கு அளித்த பெருங்கொடைகள் ஏராளம். எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டங்களின் வழியாகவும், ஆட்சிக்கு வந்தபிறகு அதிகாரத்தின் வாயிலாகவும் கருணாநிதி மேற்கொண்ட சமூக முன்னேற்றப் பணிகள் எண்ணற்றவை.
பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், அரசு ஊழியர்கள், என அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் பல மாநிலங்களுக்கு முன்னோடியான திட்டங்களாக இருப்பதைக் காணலாம்.
அவற்றில், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் அவர்களின் நிலை உயரவும் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் சிலவற்றை இங்கே நினைவுகூரலாம்..

முன்னோடி திட்டம்
1. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை : இந்தியாவிலேயே முதன்முதலாக குடும்பத்தில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்ற சட்டம் 1989ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் பல பத்து ஆண்டு காலம் கழித்தே உச்சநீ திமன்றத்தால் நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் நாட்டுக்கே முன்னோடி கருணாநிதி என்றால் மிகையாகாது.
2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் : ஏழை எளிய குடும்பத்துப் பெண்களுக்கான இந்த திருமண உதவித் திட்டம் 1989ஆம் ஆண்டு கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டது.

மறுமண நிதி உதவி திட்டம்
3. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் : 1969-1976 திமுக ஆட்சிக்காலத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் கலப்பு திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
4. டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத்திட்டம் : 1975 ஆம் ஆண்டு கருணாநிதியால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தில் கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய உதவித்தொகை வழங்கப்பட்டது.

பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள்
5. பங்காரு அம்மையார் பெண்கள் முன்னேற்றத் திட்டம் : இத்திட்டம் 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
6. ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச படிப்புத் திட்டம் : 1989ல் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக் கணக்கான பெண்கள் பயனடைந்தனர்.

லட்சணக்கான பெண்கள்
7. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம் : கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் இந்தத் திட்டத்தால் லட்சகணக்கான ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயன்பெற்றனர்.
8. இலவச பட்டப் படிப்பு : 2006ல் அமைந்த கருணாநிதி ஆட்சியின்போது ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிக்கப்பட்டது.

தொலைநோக்குத் திட்டங்கள்
9. சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் : ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொள்ளும் ஏழைப் பெண்ககளுக்கு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.1,500 வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அக் குழந்தை வளர்ந்து 20 வயது ஆகும்போது. வட்டியிடன் முழுத் தொகையும் வழங்கும் திட்டம் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது.
Recommended Video

மற்ற அரசுகளுக்கு முன்னுதாரணம்
10. இவை போக, ஈ.வே.ரா - மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண உதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகங்கள் திட்டம் உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டி, அடுத்து வரும் அரசுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications