ஆஹா.. "முத்தமிழ் அறிஞர்".. ஸ்டாலின் இருந்த மேடையில் புகழ்ந்து தள்ளிய நயினார்.. என்னங்க நடக்குது?
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாராட்டி பேசினார். முதல்வர் ஸ்டாலின் இருந்த மேடையில் கருணாநிதியை பாராட்டி நயினார் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தென் மண்டலத்திற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று இரவு நெல்லைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார்.
இன்று முதல்வர் ஸ்டாலின் ரூ. 330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் தென் மண்டல திமுக எம்எல்ஏக்கள், சபாநாயகர் அப்பாவு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் திருநெல்வேலியில் திமுக நிர்வாகிகளுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.
50 பேராமே.. வேலையை ஆரம்பித்த திமுக.. எடப்பாடிக்கு தூக்கமே போச்சு.. விழிக்கும் தொண்டர்கள்
நயினார் நாகேந்திரன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், முத்தமிழ் அறிஞரின் புதல்வர்.. தமிழ்நாடு முதல்வர்.. தளபதி ஸ்டாலின் அவர்களே.. வணக்கம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த மாவட்டம் மீது நீங்கள் மிகுந்த கரிசனையோடு உள்ளீர்கள். இந்த மாவட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் நிறைய செய்து இருக்கிறார். இங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு என் நன்றியை காணிக்கையாக கொடுக்கிறேன்.
ஆசை
எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. மணிமுத்தாறு, பாபநாசம் நதிகளை இணைக்க வேண்டும். இதை பற்றி மாநில அரசு ஆராய வேண்டும். மாநில அரசு இதில் முயற்சி செய்தால் மத்திய அரசும் இதில் கண்டிப்பாக முடிவுகளை எடுக்கும். மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ தயாராக இருக்கிறது. இந்த மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியோடு இருப்பார்கள். நீங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
நெல்லை ஸ்டாலின்
ஸ்டாலின் முதல்வராக இருக்கிற காலத்திலேயே இதை செய்ய வேண்டும். நெல்லை மாவட்டத்தில்தான் எழுத்தாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் சிலை உள்ளது. எழுத்தாளராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரும் பல சிலைகளை வைத்தார். இந்த மாவட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலினும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். நெல்லை மாவட்டத்தில் எல்லா வளங்களும் உள்ளன.
அணைகள் கட்ட வேண்டும்
நெல்லையில் மேலும் அணைகள் கட்ட வேண்டும். நெல்லை மருத்துவ கல்லூரியில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மேலும் 3 மருத்துவர்கள் தேவை. இந்த கோரிக்கையை இங்கே வைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் இதற்கு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஸ்டாலின் இங்கே அடிக்கடி வர வேண்டும். அவர் வந்தால் நலத்திட்டங்களை வழங்குவார் என்று நயினார் நாகேந்திரன் பேசினார். பாஜக எம்எல்ஏ நயினார் தனது உரையில் வார்த்தைக்கு வார்த்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று குறிப்பிட்டது மேடையில் இருந்தவர்கள் இடையே கவனம் ஈர்த்தது.