டோட்டலா 3 பேர்.. “யூ டர்ன்”.. ரூட்டை மாற்றிவிட்ட ஓபிஎஸ்.. வியூகமே இதான்! பாஜகவுக்கு இன்னொரு ஆப்ஷன்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் கொளுத்திய திரி, பாஜக தலைமை வரை பற்றிக்கொண்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிட இருப்பதாக அறிவித்த அதேசமயம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என்றும் தெரிவித்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸை தொடர்ந்து மேலும் 2 கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு என்பதை உறுதி செய்துள்ளன. இந்நிலையில், குஜராத் சென்றுள்ள ஓபிஎஸ், பாஜகவை இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்துவார் என்றே தெரிகிறது.
தமமுக ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம் ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வத்தின்ன் குரலில் ஒலித்திருக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமி தரப்பை விட குறைவான வாக்குகளையே பெற முடியும் என்று தெரிந்தும், வேறு வழியில்லாமல், தனது இருப்பை நிறுவுவதற்காக களமிறங்குகிறார் ஓபிஎஸ்.
பாஜக போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவு அளித்து, தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதுதான் ஓபிஎஸ்ஸின் கணக்காக இருக்கிறது. ஆனால், பாஜக அதற்கு யோசிப்பதால் நேரடியாக தேசிய தலைவர்களுடன் பேசச் சென்றிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள்.
ஜெ.,வுக்காக வாசலில் காத்திருந்த பிரதமர்.. ஆனா இப்போது? இபிஎஸ்-ஓபிஎஸ் மீது ‛அட்டாக்’.. கேசிபி சுளீர்
பாஜகவோடு அணுக்கம்
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமாகா, நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவே களம் காணும் என அறிவித்துவிட்டது. இதனை தொடரந்து இடைத்தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதோடு பாஜகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சியாக, பாஜக போட்டியிட விரும்பினால் தேசியக் கட்சி என்ற அடிப்படையில் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இரட்டை இலை முடங்கும்
ஓபிஎஸ்ஸின் அறிவிப்பால் அதிமுகவில் இரு அணிகள் இந்த இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளன. இதனால், இரட்டை இலை சின்னம் எந்த தரப்புக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகமுள்ள தங்கள் அணிக்கே இரட்டை இலை கிடைக்கும் எனக் கூறுகிறது ஈபிஎஸ் தரப்பு. தேர்தல் ஆணைய குறிப்புகளின்படி ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பதால், ஏ ஃபார்ம், பி ஃபார்மில் இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்பதால், பெரும்பாலும் சின்னம் முடக்கப்பட்டு இருவருக்குமே பொதுச் சின்னம்தான் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலையிடமும்
எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவதாக அறிவித்ததால், தனது இருப்பை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓபிஎஸ்ஸும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார், ஆனால், உண்மையிலேயே அவருக்கு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை, அதனால் தான் பாஜக போட்டியிட விரும்பினால் அக்கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று அறிவித்ததோடு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்தபோதும், அந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
டெல்லியின் பார்வைக்கு
ஏற்கனவே, பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர், போட்டியிட வேண்டாம் என்றே கூறியதாகத் தெரிகிறது. சிலர், அதிமுக கூட்டணியில் வேண்டுமானால் நாம் போட்டியிடலாம், தனித்துப் போட்டியிடுவது நமக்கு நாமே சூடுபோட்டுக் கொள்வது போன்றது என்றும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துகளை எல்லாம் டெல்லியின் பார்வைக்கு அனுப்பிவிட்டது தமிழ்நாடு பாஜக.
திரும்பிப் பார்க்கும் தலைமை
இந்நிலையில் தான், ஓபிஎஸ், பாஜகவை போட்டியிட வேண்டும் என்ற குரலை எழுப்பி இருக்கிறார். ஓபிஎஸ்ஸின் இந்தக் குரல் அதிமுக கூட்டணி கட்சிகளிலும் எதிரொலித்திருக்கிறது. புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக போட்டியிட்டால் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு என அறிவித்துள்ளார். இதுவரை பாஜக, தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகள் ஆதரித்திருப்பது பாஜகவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அந்தர் பல்டி
மேலும், ஈபிஎஸ் அணியினர் நேற்று காலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்துப் பேசிய நிலையில், இரட்டை இலை சின்னத்தை வைத்திருப்பவர்களுக்குத் தான் ஆதரவு எனக் கூறியிருந்தார். பின்னர், ஓபிஎஸ் தரப்பினர் அவரைச் சந்தித்தனர். அதன்பிறகு ஜான் பாண்டியன் அண்ணாமலையைச் சந்தித்தார். பின்னர் பேசிய ஜான் பாண்டியன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு" எனத் தெரிவித்தார். காலையில் இரட்டை இலை வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு எனக் கூறிய ஜான் பாண்டியன் மாலையே நிலைப்பாட்டி மாற்றிக்கொண்டுள்ளார்.
பயணத்தின் நோக்கம்
இப்படியாக ஓபிஎஸ் சொன்ன வார்த்தைக்குப் பிறகு ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோரும் பாஜகவை வெளிப்படையாகவே ஆதரித்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று குஜராத்துக்கு பறந்து சென்றுள்ளார் ஓபிஎஸ். அங்கு அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்து, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. பாஜகவை களத்திற்கு கொண்டு வருவதே ஓபிஎஸ் பயணத்தின் நோக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தாமரை வேண்டும்
அதிமுகவில் இருவர் போட்டியிட்டால் நிச்சயம் இரட்டை இலை சின்னம் கிடைக்காது, நான் ஒற்றுமைக்கு எவ்வளவோ முயற்சித்தாலும் எடப்பாடி பழனிசாமி என்னோடு இணைந்து செயல்பட தயாராக இல்லை. இரட்டை இலை இல்லாவிட்டால் நமது கூட்டணி தேர்தலில் பெரிய சறுக்கலைச் சந்திக்கும். தாமரை சின்னத்தில் பாஜக நின்றால் ஓரளவுக்கு வாக்குகளைப் பெறலாம். எனவே, பாஜக களத்தில் நிற்க வேண்டும், நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம், பாஜக நின்றால், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளிக்கும், வலுவான அணியை இப்போதே கட்டமைக்கலாம் எனப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை சொன்னது
இதற்கிடையே இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதா அல்லது போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தேசிய தலைமை முடிவு செய்த பிறகு அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் ஒருவரை பாஜக ஆதரிக்குமா? இல்லை தாங்கள் போட்டியிடுகிறோம் என்று சொல்லுமா? தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துமா எல்லா கேள்விகளுக்கும் விடை டெல்லி தலைமையிடம் தான் இருக்கிறது.
ஓபிஎஸ் வியூகம்
எடப்பாடி அணி களமிறங்குவதால், அதிமுகவுக்கு உரிமை கொண்டாடும் ஓபிஎஸ்ஸும் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், பாஜகவை களத்தில் இறக்கி, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்ஸின் திட்டம், அதனை நோக்கியே அவர் செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜக, ஓபிஎஸ்ஸின் வேண்டுகோளை ஏற்குமா என்பது அண்ணாமலை சொன்னபடி விரைவில் தெரியவரும்.