அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஓ.பன்னீர் செல்வம் சொன்ன நச் பதில் இதுதான்!
தன்னுடைய அரசியல் எதிர்காலம் தொண்டர்கள் கையிலும் மக்கள் கையிலும் இருப்பதாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை: உங்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பஞ்ச் வைத்து பதில் அளித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
Recommended Video
இரட்டைத்தலைமை வேண்டாம். ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்பதே 95 சதவீத தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு பொருத்தமானவர் என்பதே தொண்டர்களின் முடிவு. எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார் என்றும் கூறி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் இபிஎஸ் பக்கம் சாய்ந்த நிலையில் தொண்டர்களை மட்டுமே நம்புகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

அரசியல் எதிர்காலம்
பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை ஏற்றிருந்தால் அனைவர் மனதிலும் அவர் உயர்ந்திருப்பார். ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்பதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அதிமுகவை எதிர்த்தவர்கள் வீழ்ந்திருக்கிறார்களே தவிர, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை
சென்னையில் இருந்து மதுரை சென்றடைந்த அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை விமானநிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர், தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன் என்றார்.

சதிவலை
இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால், எப்படி, எவரால் ஏற்பட்டது என்பதற்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள். எல்லா சிக்கலும் விரைவில் தீரும். அதற்கு காரணம் யார் என்பதும் எனக்குத் தெரியும். சதிவலையை பின்னியவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் உரிய தண்டணையை அளிப்பார்கள்.

உண்மை தொண்டன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மனதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர் செல்வம் தொண்டராக பெற்றது பெரும் பாக்கியம் என அவர்களே கூறியுள்ளார்கள். அதுவே எனக்குப் போதும் என்றும் தெரிவித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

மக்கள் நிர்ணயிப்பார்கள்
பேட்டியை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் கிளம்பும் போது ஒரு செய்தியாளர், உங்களுடைய எதிர்காலம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, ஓ.பன்னீர் செல்வம், என்னுடைய அரசியல் எதிர்காலத்தை அதிமுக உண்மை தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள் என்று பஞ்ச் வசனம் பேசினார். இன்று தேனி செல்லும் ஓ.பன்னீர் செல்வம் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications