இனி பேசவே கூடாது! மீட்டிங்கில் கர்ஜித்த எடப்பாடி.. அடுத்த டார்கெட் ரொம்ப பெருசு! பரபரப்பில் அதிமுக!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் தற்போது கட்சியிலேயே ஹாப்பி மேன். தனக்கு கட்சிக்குள் தடையாக இருந்த.. கட்சிக்குள் சிக்கலாக இருந்த ஒரே விஷயமான சசிகலா "பேக்டர்" முடிவிற்கு வந்துவிட்டது. இந்த நிலையில்தான் சசிகலா பிரச்சனை தீர்ந்துவிட்டதால்.. அடுத்த கட்ட பிளான்களில் அவரின் தரப்பு இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்த பதவியை பயன்படுத்திதான் நான் அதிமுக பொதுச்செயலாளர்.. கட்சியை மீட்க போகிறேன் என்று சசிகலா வாரம் ஒரு "ஆடியோவை ரிலீஸ்" செய்து கொண்டு இருந்தார்.
ஆனால் இப்போது கோர்ட்டே அவரை நீக்கியது செல்லும் என்று கூறிவிட்டதால்.. ஓடாத பிளாப் படத்தின் மூன்றாவது வார தியேட்டர் கூட்டம் போல.. அவரின் கூடாரமே காலியாகிவிட்டது.

உற்சாகம்
ஏற்கனவே சசிகலா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதால்.. அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை விட்டு விலகிவிட்டனர். டிடிவி தினகரன் கூட சசிகலாவிடம் பெரிதாக எதுவும் பேசிக்கொள்வது இல்லையாம். இந்த தீர்ப்பு வந்தால்.. சித்திரை போய் வைகாசியில் சசிகலா டாப்பாக வருவார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களும்.. இப்போது வந்த தீர்ப்பால் மனமுடைந்து போய் இருக்கிறார்கள். சசிகலா பக்கம் போன மற்ற சிலரும் மீண்டும் அதிமுகவிற்கோ.. அல்லது அமமுகவிற்கு வந்து சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கருதப்படுகிறது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் மூத்த உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கோர்ட் தீர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

சந்தோசம்
இதில் சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வரும் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசியதில், தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துள்ளது. மேல்முறையீடு செய்தாலும் வழக்கு நிற்காது. பொதுக்குழு கூடி எடுத்த முடிவு சரிதான் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி நாம் உட்கட்சி பூசல் இன்றி உறுதியாக செயல்பட முடியும் என்று பேசி இருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் ஏக சந்தோஷத்தில் கண்டிப்பான குரலில் பேசி இருக்கிறாராம்.

என்ன சொன்னார்?
இதில் பேசிய எடப்பாடி.. தீர்ப்பு வந்துவிட்டது.. இனியும் "அவரை" மையப்படுத்தி கட்சிக்குள் யாரும் பிரச்சனை செய்ய கூடாது, அவரை பற்றி யாரும் இனி கட்சிக்குள் வாய் திறக்க கூடாது. அவரை வைத்து கட்சிக்குள் பிரச்சனை செய்யலாம் என்று யாரும் நினைக்க கூடாது என்று மிகவும் கண்டிப்பான குரலுடன் எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சசிகலா பிரச்சனை தீர்ந்துவிட்டதால்.. அடுத்த கட்ட பிளான்களில் அவரின் தரப்பு இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்ட பிளான்
அதன்படி அதிமுக ஏற்கனவே உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. இன்னும் 70 மாவட்டங்களுக்கு இந்த தேர்தல் நடக்க வேண்டும். இதில் எடப்பாடி முழுக்க முழுக்க தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்க போவதாக கூறப்படுகிறது. அதன்பின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் ஏப்ரல் 19, 21 தேதிகளில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதிலும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அதிகம் இறக்குவார் என்று கூறப்படுகிறது.

25 மாவட்டம்
ஏற்கனவே நடந்த 25 மாவட்ட உட்கட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் தேர்வாகி உள்ளனர். இதில் கையெழுத்து போட ஓபிஎஸ் மறுத்து வந்த நிலையில்.. தற்போது அவருக்கு கையெழுத்து போடுவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் எடப்பாடி ஆதரவாளர்களே அதிகம் தேர்வாக வாய்ப்பு உள்ளது. இங்கே ஓபிஎஸ் லாக்காகி இருக்கிறார்.

மீதம் உள்ள தேர்தல்
எனவே மீதம் உள்ள இடங்களில் வரும் நாட்களில் வேகவேகமாக தேர்தல்கள் நடத்தப்படும். இதனால் எல்லோரையும் மொத்தமாக தேர்வு செய்த பின் எடப்பாடி ஒற்றை தலைமை பதவியை பார்த்து நகரும் வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆதரவு நிர்வாகிகளை வைத்து பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி ஒற்றை தலைமை பதவியை பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications