ஒரே ஒரு பாயிண்ட்.. அத்தனையும் அடிபட்டுப் போகும்.. ஓபிஎஸ்ஸின் ‘அசராத’ நம்பிக்கைக்கு காரணம் இதுதான்!
சென்னை : அதிமுகவை கைப்பற்றும் போட்டியில், எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்வைக்கும் அத்தனை பாயிண்டுகளையும் தங்களது ஒரே பாயிண்ட் சுக்குநூறாக்கிவிடும் என உறுதியாக நம்புகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
பொதுக்குழுவில் இருக்கும் 2 ஆயிரத்துச் சொச்சம் உறுப்பினர்களும் கூட ஒட்டுமொத்த தொண்டர்கள் எனும் எண்ணிக்கைக்குள் தான் வருகிறார்கள். எனவே, தொண்டர்கள் தேர்ந்தெடுத்த பதவிகளுக்கு பொதுக்குழு மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அடிப்படையற்ற வாதம் என பாயிண்டை முன்வைக்கிறது ஓபிஎஸ் டீம்.
ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகத் தெரிவித்துத்தான், மீண்டும் ஒரு பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆவதற்கான முகாந்திரமே இல்லை என ஆரம்பம் முதலே அடித்துக் கூறி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ் பக்கம் இருக்கும் சட்ட வல்லுநர்களும் இந்த ஒரு பாயிண்ட் நமக்குச் சாதகமாகவே இருக்கிறது என நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் மிக்கது என்ற ஈபிஎஸ்ஸின் வாதம், அதிமுகவின் சிறப்பு விதியால் அடிபட்டுப் போகிறது.
போட்டி தலைமை அலுவலகம்! மாநிலம் முழுக்க கட்சி ஆபீஸ்! ஷிண்டேவின் பிரம்மாண்ட பிளான்! தாக்கரேவுக்கு செக்
ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், டிசம்பர் 2021ல் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லியே, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக செய்தியாளர்களைச் சந்தித்துச் சொன்னார் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம். அதையே பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இன்றி தலைமைக் கழகம் மூலம் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சட்ட விதிகள்
பொதுவாக அரசியல் கட்சிகளில் பொதுக்குழுவே சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகளிலும் அதுவே நிலை. அதனால் தான், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், பொதுக்குழுவைக் கூட்டி கட்சியைக் கைப்பற்றினார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை சிறப்பு சட்ட பிரிவுகள் உள்ளன. அதன்படி அதிமுகவில் தொண்டர்களுக்கே தலைமையைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கே பொதுக்குழுவைத் தாண்டிய அதிகாரங்கள் உள்ளன. இதனால் தான் ஓபிஎஸ் விடாமல் போராடி வருகிறார்.
ஈபிஎஸ் தரப்பின் ட்ரம்ப் கார்டு
கடந்த 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தொண்டர்களே தேர்ந்தெடுக்கும் வகையிலான திருத்தத்திற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. அதே நேரம், மற்ற பதவிகள் எதுவும் காலாவதி ஆகாது, ஒருங்கிணைப்பாளர் பதவி விதிகளில் மட்டுமே திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதால் அந்தப் பதவிகள் மட்டுமே காலாவதி ஆனதாக அழுத்தமாகச் சொல்கிறது எடப்பாடி தரப்பு.
தேர்தல்கள் முடிந்தது
ஆனால், ஓபிஎஸ் தரப்போ, ஓருங்கிணைப்பாளர் விதிகளில் திருத்தம் செய்த பின்னர் கட்சியில் அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்தி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து அதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துவிட்டது. அதனால், அந்தப் பதவி நியமனங்கள் முடிவடைந்துவிட்டன. அதன்பிறகும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனச் சொல்வது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையே குறைத்து மதிப்பிடும் செயல் என்ற வாதத்தை முன்வைக்கிறது. பொதுக்குழு அங்கீகாரம் அளித்தால் தான் ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செல்லும் என எந்தவொரு தீர்மானமும் வரவில்லையே என ஐயத்தை முன்வைக்கிறது ஓபிஎஸ் டீம்.
உச்சபட்ச அதிகாரம்
அதிமுகவில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த உட்கட்சி சட்டப்படி, தலைமைப் பதவி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதையொட்டியே, ஒருங்கிணைப்பாளர்களை தொண்டர்களே தேர்வு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே ஓட்டில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தொண்டர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்ததோடு, அந்தப் பதவிக்கான அதிகாரம் தொடங்கி விடுகிறது.
பொதுக்குழு அங்கீகரிக்கத் தேவையில்லை
அதிமுக தொண்டர்கள் ஏகமனதாக தேர்வு செய்த பிறகும், அதற்கு பொதுக்குழு அங்கீகாரம் வேண்டும் என்றால், எம்ஜிஆரின் அந்த நோக்கமே அடிபட்டுப் போகிறது. என்னதான் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டாலும் பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்பது விதி இல்லை. அப்படி இருந்தால், அதற்கு ஏன் தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே தலைவர் என்ற விதி வேண்டும்? பொதுக்குழுவை வைத்தே தேர்ந்தெடுத்து விடலாமே என்ற கேள்வியை எழுப்புகிறது ஓபிஎஸ் தரப்பு.
அடிபட்டுப் போகும்
அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்கள் தேர்வு செய்துவிட்ட பிறகு, அங்கே வேறு எந்த கட்சி அமைப்பின் கேள்விக்கும் இடமில்லை. பொதுக்குழுவில் இருக்கும் 2 ஆயிரத்துச் சொச்சம் உறுப்பினர்களும் கூட ஒட்டுமொத்த தொண்டர்கள் எனும் எண்ணிக்கைக்குள் தான் வருகிறார்கள். அவர்களும் சேர்ந்து ஏகமனதாக தேர்ந்தெடுத்தது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள். அப்படி இருக்கும்போது, பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அடிப்படையே அற்ற வாதம் என பாயிண்டை முன்வைக்கிறது ஓபிஎஸ் டீம்.
ஒரே பாயிண்ட்
இந்த புள்ளியை நோக்கிய வாதங்களே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த பொதுக்குழு வழக்கு விசாரணையின்போதும் ஓபிஎஸ் தரப்பால் முன்வைக்கப்பட்டன. இந்த 'பாயிண்ட்' கட்சி விதிகளை நன்கறிந்த சட்ட வல்லுநர்களால் வெகுவாக ஆலோசிக்கப்பட்ட பிறகே நீதிமன்றத்திலும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் அத்தனை முயற்சிகளையும் உடைத்தெறிய இந்த பாயிண்ட் போதும் என்ற நம்பிக்கையுடனே தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.