ஒரு தடவை தேர்தல்..3 முறை வாக்கு சதவீதம்! குத்து மதிப்பாய் போட்ட அதிகாரிகள்..! SEE இதான் பிரச்சினையே!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவின்போது பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி மாற்றி கூறியதால் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் வாக்கு சதவீதத்தை வெளியிடும் போது ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்து இருக்கிறார்.
18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது நேற்று தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

கடுமையான கோடை வெயிலுக்கு இடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்த நிலையில் தமிழகத்தில் சுமார் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்கு சதவீதம்: தேர்தல் அன்று இரவு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பில், தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குழப்பம்: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதமும், தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்திலும் பெரும் வேறுபாடு இருப்பதால் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று சுமார் 3% குறைத்து அறிவித்தது. இது அரசியல் கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
கடும் விமர்சனம்: வாக்கு சதவீதம் குறைந்தது எப்படி என பலரும் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்விகளை எழுப்பியதோடு விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3வது முறையாக தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் கண்டனங்கள் எழுந்தது. ஒரு முறை தேர்தல் நடந்த நிலையில் 3 முறை வாக்கு சதவீதத்தை மாற்றி மாற்றி கூறுவதா என கேள்விகள் எழுந்தன.
குளறுபடிக்கு காரணம்: இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்திருக்கிறார். அதில் செயலியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வாக்கு சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாகவும் செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை என கூறினார்.
அதிகாரிகள் மீது தவறு?: ஆனால், வாக்கு சதவீதத்தை ஒரு சிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாகவும் தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமானதால் குளறுபடி ஏற்பட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்தே தற்போது வாக்கு சதவீதம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு சில தேர்தல் அதிகாரிகள் முறையாக பதிவு செய்யாமல் குத்துமதிப்பாக வாக்குசதவீத விபரங்களை பதவிட்டதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications