மாண்டஸ் புயல் பாதிப்பு எப்படி இருக்கும்? வர்தா, தானே போல புரட்டிபோடுமா? வெதர் எக்ஸ்பர்ட்ஸ் விளக்கம்!
சென்னை : மாண்டஸ் புயல் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். மாண்டஸ் புயலின் போது மரக்கிளைகள் முறியும், குடிசைப்பகுதிகள் பலத்த காற்றால் பாதிக்கப்படும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க உள்ளதால் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு வடகிழக்கே 270 கி.மீ தொலைவில் உள்ளது. 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்.. 14 அடி உயரும் மெரினா அலைகள்.. பொதுமக்களுக்கு தடை! மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதம்
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் இன்று புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால் மாமல்லபுரம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பட்டினம்பாக்கம், காசிமேடு, மெரினா, பெசன்ட் கடற்கரைகளில் அலையின் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் இன்று முதல் நாளை வரை கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கனமழை
மாண்டஸ் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 9) தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
அதேபோல, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் கனமழை
மேலும் நாளை (டிசம்பர் 10) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும்போது
6 மணி நேரத்திற்கு தீவிர புயலாக மாறும் மாண்டஸ் படிப்படியாக வலுவிழக்கும். காற்றின் வேகம் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரங்களின் அருகில் நிற்கக்கூடாது
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாண்டஸ் புயலால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்ற ஐயம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. மெதுவாக நகர்ந்து வருவதால் பாதிப்பு எதுவும் இருக்காதா அல்லது, வர்தா, கஜா போல தமிழகத்தைப் புரட்டிப் போடுமா என பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
மாண்டஸ் புயல் தாக்கம்
இந்நிலையில், மாண்டஸ் புயல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், "இந்த புயலின் போது மரக்கிளைகள் முறிவு ஏற்படும். குடிசைப்பகுதிகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். சிறு மரங்கள் முறிந்து விழக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
வானிலை ரமணன்
வானிலை ஆய்வாளரும், முன்னாள் வானிலை மைய இயக்குநருமான ரமணன் கூறுறுகையில், "மாண்டஸ் புயல் வலு இழக்கும்போது கண்டிப்பாக கரையை கடக்கும். உராய்விசையின் காரணமாக வலு குறையும். இதனால் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். தற்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. கரையை கடக்கும்போது புயல் உள்மாவட்டங்களில் மையம் கொண்டு விடும் என்பதால் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன் ஜான்
வானிலை ஆய்வாளர் வெதர் மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "மாண்டஸ் புயலின் புயல் காற்று அந்த அளவுக்கு வேகம் இருக்காது. நடுக்கடலில் மாண்டஸ் வலுவான புயலாக இருந்தாலும் வறண்ட காற்றினாலும் வலு இழக்கிறது. வலுவிழந்த நிலையில் இருப்பதால் 60 கிலோ மீட்டரில் இருந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும்." எனத் தெரிவித்துள்ளார்.
தானே, வர்தா போல இருக்காது
மேலும், நிறைய பேர் இந்த மாண்டஸ் புயல் காற்று, 'தானே' புயல் மாதிரி இருக்குமா? 'வர்தா' புயல் மாதிரி இருக்குமா? என்று அச்சப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த புயலில் வேகம் இருக்காது. அதுமாதிரி இல்லாவிட்டாலும் 60 கிலோ மீட்டரில் இருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் புயலின் வேகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.