"ஐயோ கொல்றாங்களே.." அலறிய கருணாநிதி.. கீழே தள்ளி விட்ட போலீஸ்.. சிறை வாசலில் தர்ணா.. மறக்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2001ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி.. தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் அத்தனை பேர் காதுகளிலும் எதிரொலித்த குரல், "ஐயோ.. கொல்றாங்களே.. கொல்றாங்களே.." என்ற ஒரு அபய அலறல் குரல்தான்.

திடுக்கிட்டபடி, கண்களை கசக்கி அவசர அவசரமாக படுக்கையை விட்டு எழுந்து பார்த்தால், வீட்டிலிருந்த டிவியிலிருந்துதான் அந்த சத்தம் வந்தது புரிந்திருக்கும். இன்னும் கொஞ்சம் உற்று பார்த்தால், ஐயோ.. ஐயோ என, அபய குரல் எழுப்பியது வேறு யாருமல்ல, தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியான கருணாநிதி என்பது விளங்கியிருக்கும்.

அன்றைய தினம், காலை, தமிழர்களுக்கு அப்படித்தான் விடிந்தது.

தொடர்ச்சியாக ஒளிபரப்பு

தொடர்ச்சியாக ஒளிபரப்பு

அப்போது கலைஞர் டிவி வராத காலகட்டம். சன் டிவி இந்த வீடியோவை அதிகாலை முதல் தொடர்ச்சியாக.. ஆம்.. தொடர்ச்சியாக, வேறு எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாமல் தொடர்ந்து சுழல விட்டபடியே இருந்தது. தமிழகத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கும் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்த போலீசாரால் மிக மோசமாக கையாளப்பட்டார் என்பதை புரிந்து கொள்ளவும் இந்த செய்தி ஒளிபரப்பு உதவியது என்றால் அது மிகையில்லை.

ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு

1991 முதல் 1996 வரை ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். சசிகலா குடும்பத்தோடு அவர் செய்த விஷயங்கள் சாட்டிலைட் டிவி சேனல்களில் அம்பலப்பட்டன. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் குவிந்திருந்த செருப்பு முதல் பண்ட பாத்திரங்கள், நகைகளின் குவியல் போன்றவற்றை பார்த்து மக்கள் வாயடைத்து போயினர். இதனால்தான் 1996 சட்டசபை தேர்தலில் மரண அடி வாங்கியது அதிமுக. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப்போனார். அபார வெற்றி பெற்ற திமுக 2001 வரை ஆட்சி செய்தது. 1996ல் போலீசார் ஜெயலலிதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். 27 நாட்கள் சிறையிலிருந்தார் ஜெயலலிதா.

கருணாநிதி வீடு புகுந்த காவல்துறை

கருணாநிதி வீடு புகுந்த காவல்துறை

ஆனால், 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று, ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும் கருணாநிதி ஆட்சியில் சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி இப்படி ஒரு கைது நடவடிக்கைக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டார். வெறும் கைது என்ற அளவில் இல்லாமல், ஏதோ காவல்துறையை வைத்து தாக்கியதை போலவே இருந்தது கோபாலபுரம் இல்லத்திற்குள் நடந்த காட்சிகள்.

தள்ளிவிடப்பட்ட கருணாநிதி

தள்ளிவிடப்பட்ட கருணாநிதி

கருணாநிதியின் கைது, ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியுமாம். அந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே கைது செய்யப்போகும் விஷயம் தெரியும். நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியை தட்டி எழுப்பி கைது செய்தபோது, அவருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது வயதானவர் என்றும் பாராமல் அங்கும் இங்கும் போலீசாரால் பந்து போல தள்ளிவிடப்பட்டு கையாளப்பட்டார் கருணாநிதி. கீழே தள்ளி விடப்பட்டார். முத்துக்கருப்பன் மோதிரக் கையால் கருணாநிதியை குத்தியதாகவும் கூறப்பட்டது.

லுங்கியுடன் கைது

லுங்கியுடன் கைது

போலீசார் வந்ததுமே முதலில் கருணாநிதி போன் போட்டது, தனது மனசாட்சி என்று எப்போதுமே வர்ணிக்கும், முரசொலி மாறனுக்குத்தான். அவர் அப்போது, மத்திய அமைச்சராக இருந்தார். வேறு எதையும் கருணாநிதி யோசிப்பதற்குள் கைது நடவடிக்கை இருந்தது. அதுவும், அணிந்திருந்த லுங்கியுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இல்லை, இல்லை.. கிட்டத்தட்ட இழுத்துதான் செல்லப்பட்டார்.

அலைக்கழிக்கப்பட்ட கருணாநிதி

அலைக்கழிக்கப்பட்ட கருணாநிதி

இதிலும் ஒரு கொடுமை என்னவென்றால், சாதாரண கைதிக்கு அளிக்கப்படும் உரிமை கூட கருணாநிதி போன்ற முன்னாள் முதல்வர் மற்றும் எம்எல்ஏ அந்தஸ்தில் இருந்தவருக்கு தரப்படவில்லை. ஏனென்றால், கருணாநிதியை போலீசார் எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதே யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அப்போது ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், கனிமாழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் காரில் அங்கு விரைந்தனர். ஆனால் கருணாநிதி உடனே அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார். முன்பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்துவிட்டு பின்பக்கமாக மறைத்து வேறு காரில் கருணாநிதியை அழைத்து சென்றனர் போலீசார்.

சிறை வாசலில் கருணாநிதியுடன் கனிமொழி தர்ணா

சிறை வாசலில் கருணாநிதியுடன் கனிமொழி தர்ணா

வேப்பேரி காவல்நிலையம் அழைத்து வரப்படுவதாக தகவல் கிடைக்க கருணாநிதி குடும்பத்தார் அங்கு சென்றனர். அப்போது கருணாநிதி குடும்பத்தாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கூறாமல் ஏன் அலைகழிக்கிறீர்கள் என்று கருணாநிதி குடும்பத்தாரும், திமுகவினரும் கொந்தளித்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் கருணாநிதி. கருணாநிதி உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர் குழு அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்தார். ஆனால், அப்போது சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. இதை எதிர்த்து, சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி. அப்போது கனிமொழி அவர் கூடவே அங்கேயே தரையில் அமர்ந்து விட்டார். இந்த புகைப்படம் அப்போது பெருமளவுக்கு பேசப்பட்டது.

மறக்க முடியாத நிகழ்வு

மறக்க முடியாத நிகழ்வு

கருணாநிதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தகவலை அறிந்த தொண்டர்கள் அந்தப் பகுதியில் இருந்த மேம்பாலத்திற்கு மேல் இருந்தபடியே கருணாநிதியின் போராட்டத்தை பார்த்து கோஷமிட்டனர். கலைஞர் வாழ்க.. என்றும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷம் விண்ணை முட்டியது. அவர்களின் ஆக்ரோஷத்தை பார்த்த காவல்துறையினர் விரட்டியடிக்க முற்பட்டனர். ஆனால் தொண்டர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தனர். காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தியது. தொண்டர்கள் தாக்கப்படுவதை அறிந்த கருணாநிதி சிறைக்குள் செல்ல சம்மதித்தார். இப்படி ஒரு நாள் முழுக்க பதற்றத்தை தூவிய தினம்தான் இன்று. இது நடந்து 21 வருடங்கள் ஆனாலும், அதிகாலையில் கருணாநிதி வீட்டுக்குள் கேட்ட அந்த அபயக் குரல் இன்னும் பல தமிழர்களின் செவிப்பறையில் எதிரொலித்தபடிதான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+