இருவருக்கும் ‘குட் நியூஸ்’ சொன்ன பாஜக மேலிடம்.. எடப்பாடி குஷி.. முதலில் ஈபிஎஸ்.. வழியனுப்ப ஓபிஎஸ்!
சென்னை : சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நேரம் கேட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிரதமர் மோடி நேரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியாக டெல்லி சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் பிரதமர் மோடியை அங்கு தனியாகச் சந்தித்துப் பேச முடியவில்லை.
இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடி நாளை பகல் வரை சென்னையில் இருப்பார். இந்த நேரத்தில் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பிரதமரை சந்திக்க இருக்கின்றனர்.

சென்னை வரும் மோடி
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு கோலாகலமாகச் செய்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

பிரதமர் மோடி
மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்திற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கை சென்றடைவார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்குப் பிறகு, அவர் ராஜ் பவனுக்குச் சென்று அங்கு இன்று இரவு தங்குகிறார். அங்கு இரவு நேரத்தில், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமரை சந்திக்க நேரம்
சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டு டெல்லி பாஜக, தமிழக பாஜக என தொடர்ச்சியாக காய் நகர்த்தி வந்தனர். அதிமுக மோதல் நிலவி வரும் சூழலில் இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி சந்திப்பாரா அல்லது தவிர்த்து விடுவாரா என்பதுதான் அரசியல் அரங்கில் முக்கியமான கேள்வியாக உருவெடுத்தது.

குட் நியூஸ்
இந்நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்புக்குமே நல்ல செய்தி கொடுத்துள்ளது பாஜக தலைமை. சென்னை வரும் பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியைச் சந்தித்து, அதிமுக பிரச்சனை பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தயாராகி வருகின்றனர். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவர்களில் எடப்பாடி பழனிசாமிதான் முதலில் மோடியை சந்திக்க இருக்கிறார்.

வரவேற்க எடப்பாடி
இன்று பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் சென்று வரவேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்க இருக்கின்றனர். மேலும், இன்றைய தினம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

வழியனுப்ப பன்னீர்செல்வம்
அதேநேரம், இன்று ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. நாளை காலை ஓபிஎஸ் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிரதமர் மோடியைச் சந்திக்கும் ஓபிஎஸ், அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications