குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. எப்போது தொடங்கும்? யாருக்கு தரப்படும்? - வெளியான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
வெள்ள பாதிப்பு.. மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 5000 நிவாரண நிதி.. புதுவை முதல்வர் ரங்கசாமி
நிதி ஆதார ஆய்வு
இந்த நிலையில்தான் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு சில மாதங்களாக செய்து வந்தது. எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்தே குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்தார்.
7 மாத எதிர்பார்ப்பு
ஆனால் அதன்பின்பும் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. 7 மாதங்களாக திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. மக்கள் மத்தியில் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. முதல் 5 மாதங்களில் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு பிறகாவது திட்டத்தை தொடங்கி இருக்க வேண்டும், பெண்களின் நலன் கருதி வேகமாக இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இப்போது இயலாத காரியம் ஏன்?
ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செலவு
இவ்வளவு செலவை செய்ய முடியாது என்பதால் ரேஷன் கார்டில் தகுதி அடிப்படையில் பணம் அளிக்க உள்ளனர். அதன்படி அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
எல்லோருக்கும் தர முடியாது
NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் வரும் பொங்கல் அன்று முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. பெரிய விழா எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.