"தமிழ்க் கடல்.." மடைதிறந்த வெள்ளமாக இலக்கியமும் ஆன்மீகமும் பாயும்.. அவர்தான் நெல்லை கண்ணன்
சென்னை: நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த இலக்கிய பேச்சாளர். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நெல்லைக்கண்ணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும் லக்குமி அம்மையாருக்கும் 4வது மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழி மீது ஆர்வமும் பாரதி பாடல் மீது தனியாத ஈடுபாடும் கொண்டவர்.
நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றல் மூலம் பல பட்டிமன்றங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர். அரசு தொலைக்காட்சியில் பலமுறை பட்டிமன்ற நடுவராக இருந்தார்.

நெல்லைக்கண்ணன்
நெல்லை கண்னன் காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மடை திறந்த வெள்ளம்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றி கூட்டத்தினரை கட்டிப்போட்டு தனது மடைதிறந்த வெள்ளமான உரையைக் கேட்கவைத்தவர்.

காங்கிரஸ் கட்சி
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தநேரத்தில், அவர் பிரசாரத்திற்காக நெல்லை வந்தபோது நெல்லை கண்ணன் வீட்டில்தான் மதிய உணவு சாப்பிட்டார் என்று கூறுவர். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெல்லை கண்ணன் நெருக்கமான நட்பு கொண்டவர்.

கருணாநிதியை எதிர்த்து போட்டி
நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996ஆம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார்.
அவருக்காக ஜெயலலிதா பிரசாரமும் மேற்கொண்டார். எனினும் அந்தத் தேர்தலில் நெல்லை கண்ணன் தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா உடன் சந்திப்பு
கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தவர் நெல்லை கண்ணன். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் ‘அதிமுகதான் சிறந்த கட்சி; ஜெயலலிதாதான் சிறந்த தலைவர்' என்று அளித்த பேட்டியால், போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து ஜெயலலிதா பேசினார். இதனையடுத்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அதற்கான செலவுகள் அனைத்தையும் அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் என்று அப்போது அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மோடியை எதிர்த்து பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ‘ஜோலியை முடிப்பீங்க' என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலக்கிய உலகிற்கு பேரிழப்பு
அரசியலில் தீவிரமாக செயல்பட்டாலும் அவரால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், நெல்லை கண்ணன் தொடர்ந்து, பட்டிமன்றம், இலக்கியம், சமய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், தன்னை அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறினார். 77வயதான நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றலால் பட்டிமன்றங்களிலும், இலக்கிய கருத்தரங்குகளிலும் அரசியல் மேடைகளிலும் தனிமுத்திரை பதித்து வலம்வந்தவர். உடல் நலக்குறைவினால் இன்று அவர் காலமானார். அவரது மரணம் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும்.












Click it and Unblock the Notifications