2 மரணங்கள்? 2 இடைத் தேர்தல்கள்? விக்கிரவாண்டி பக்பக்.. திமுக லிஸ்ட் ரெடி! யார் அவர்?
சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக யாரை வேட்பாளராக அறிவிக்க உள்ளது என்பது பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த மக்களவைத் தேர்தலில் 40/40 என்று திமுக சாவால் வீட்டுக்குக் கொண்டிருந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும் என்று.

ஆமாம்! விக்ரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு மட்டும் இல்லை. அந்தத் தொகுதி மக்களே கூட எதிர்பார்த்திராத அதிர்ச்சிதான்.
அவரது மறைவையொட்டி அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனே எல்லோரும் நினைத்து என்னவென்றால், இந்தத் தேர்தல் நேரத்திலேயே விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுவிடும் என்று.
ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை.
இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கடந்த 8 ஆண்டுகளில் 2முறை இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
நா. புகழேந்தி 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்குகளைப் பெற்று திமுகவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தார். திமுக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனையைக் கொண்டாடப்போகும் தருணத்தில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவர், இயற்கை எய்தினார்.

இதேபோல் 2011 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரான கு. ராதாமணி 2019 ஆம் ஆண்டு மறைந்தார்.
இந்தத் தொகுதியில் ஆட்சிக்காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது திமுக.
இந்த விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தாண்டி சிபிஐ (எம்) சார்பில் 2011 ஆர். ராமமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதி வடதமிழ் நாட்டுக்கு உட்பட்டுள்ளதால், பாமக இங்கே பலமாக உள்ளது. அதே போல தேமுதிகவுக்கும் நல்ல தொண்டர் பலம் உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரைச் செல்வாக்கு மிக்க சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதியாக விக்கிரவாண்டி இருக்கிறது. ஆளும் கட்சியான திமுகவை எடுத்துக் கொண்ட இந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக பொன்முடி இருக்கிறார்.
திமுக எதிர்க்கட்சியாகவும் அதிமுக ஆட்சி அதிகாரத்திலும் உட்கார்வதற்கு உறுதுணையாக இருந்த 2016இல் சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுகவினால் விக்கிரவாண்டியைக் கைப்பற்ற முடியவில்லை.

அங்கே பொன்முடியின் கொடிதான் உயரத்தில் பறந்தது. அவரது நண்பரான கு. ராதாமணிக்கு கட்சியில் சீட்டு வாங்கிக் கொடுத்து, தனது கட்டுப்பாட்டுக்குள் விக்கிரவாண்டி தொகுதியை அடக்கமாக வைத்திருந்தார் பொன்முடி.
இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக வைத்து தனது மகன் கெளதம சிகாமணியைக் களம் இறக்கிவிடலாம். அது தனதுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பாகவும் இருக்கும். ஏனென்றால், அவர் எப்போது மணல் குவாரி வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலை நீடிக்கிறது.
அடுத்து திமுக அமைச்சர்களின் அனைத்து வாரிசுகளும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் விடுபட்டுள்ள ஒருவர் பொன்முடி மகன். அதுவும் ஆரம்பக் காலத்தில் ஸ்டாலினின் இணக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர் பொன்முடி.
ஸ்டாலின் மகன் துணை முதல்வராக உட்கார வைக்கப்படும் போது, தனது மகனைச் சட்டமன்றத்திற்குள் வைத்து அழகு பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்கிறார்கள். ஆகவே தலைமைக்கு நேரடியாகவே செய்தியைக் கடத்தி இருக்கிறார் என்கிறார்கள்.
ஆனால், தலைமை அந்த விசயத்தில் லேசாகத் தக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. காரணம், பொன்முடி சில இடங்களில் வாய்த்துடுக்காகப் பேசியதுதான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய குடைச்சல் தரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஆகவே, அவரது மகனையும் பொறுப்புக்குள் கொண்டு வந்துவிட்டால், சமாளிப்பது கடினம்.
ஒரு சீனியரை கண்டிக்கவே முடியாமல் தவிக்கிறோம். அவரது மகனும் தேவையா எனப் பல யோசனைகள் மனதில் ஸ்டாலின் ஓட்டி வருகிறார் என்கிறார்கள்.
பொன்முடி மகன் இல்லை என்றால் அடுத்து யார்?
இந்த வம்பே வேண்டாம். அனுதாப அலையைப் பயன்படுத்தி, அந்த இடைத் தேர்தலில் சாதிப்பதுதான் நல்லது என்றும் மேல் மட்டம் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அப்படிப் பார்த்தால், புகழேந்தியின் மகன் செல்வக்குமாருக்குச் சீட்டுக் கொடுத்துவிட்டால் சிக்கலே இருக்காது என்றும் நினைத்துள்ளது தலைமை. ஆனால், மகன் தனது மனைவியைப் பிரசன்னா தேவியை நிறுத்தலாம் என்றும் யோசித்துள்ளதாகத் தொகுதிக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
இந்த யோசனைக்குக் கூட பொன்முடி பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவே தெரிகிறது. காரணம், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியே பொன்முடியின் ஆள் தான். ஆகவே அவர் அதற்கு மறுப்பு சொல்லப் போவதில்லை என்றும் சொல்கிறார் ஊரில் உள்ள உபி ஒருவர்.
இவர்கள் இல்லை என்றால், வேறு யார்?
அதற்கும் பல ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக உள்ள ஜெயசந்திரனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரைப் போலவே அன்னியூர் சிவாவும் போட்டிக்கான பட்டியலில் உள்ளதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. இவர் திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார்.
மிக இளைமைக் காலத்திலேயே கட்சிக்குள் தன்னை இணைத்துக் கொண்டவர். முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் அன்புக்கு உரியவராக இருந்தவர். ஆகவே, அவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள்.
அதிமுக தரப்பில் யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் இடத்தில் சிவி சண்முகம்தான் இருக்கிறார். ஆனால், அவரது பேச்சைக் கேட்டு யாரேனும் போட்டியிடுவார்களா? என்பதும் சந்தேகமாக உள்ளது என்று சொல்கிறார்கள் தொகுதியில் உள்ள ர.ரக்கள்.
காரணம், இந்த மக்களவைத் தேர்தலில் 40/40 திமுக வென்றுவிட்டால், அதிமுக அணிக்குள் குழப்பம் வந்துவிடும். எடப்பாடி பழனிசாமியின் பவர் குறைந்துவிடும். அதற்கு முதல் போர்க் கொடியை உயர்த்துபவர் சிவி சண்முகமாகக் கூட இருப்பார்.
ஆகவே, அதிமுக இந்தச் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. காரணம், ஈரோடு கிழக்கு ஃபார்மூலாவை பயன்படுத்தி திமுக வெற்றி பெற்றுவிடும்.
ஆளும் கட்சியாக உள்ள திமுகவை இடைத்தேர்தலில் தோல்வியடைய வைப்பது கடினம். எனவே நமக்கு என்ன வெயிடேஜ் உள்ளது என்பதைப் பார்த்துவிட்டுத் தான் களத்தில் குதிப்போம் என்கிறார்களாம் சிவி சண்முகம் விசுவாசிகள்.
அப்படி யார் முன்வருவார்கள் எனப் பார்த்தால், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வன் தயார் நிலையில் நிற்கிறார். அடுத்து எஸ்.ஆர்.எம். பன்னீர். அதிமுக தரப்பில் இவருக்கும் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications