நேரம் பார்த்து தாவிய கோவை செல்வராஜ்! சொன்னது ஒன்னு.. செஞ்சது ஒன்னு! பின்னால் இருந்து இயக்கிய ‘மாஜி’
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு உற்ற துணையாய் இருந்த கோவை செல்வராஜ் அதிரடியாக அவர் அணியில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்த நிலையில், அதற்கு பின்னணியில் கோவையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும் இருப்பதாகக் கூறுகின்றனர் கொங்கு மண்டல அதிமுகவினர்.
ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கும் கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிர வைத்திருக்கிறார்.
அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ் மகன் உசேன்!
கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் அணியில் முக்கிய நிர்வாகியான இவர் விலகியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தங்கள் தரப்புக்கு வராமல் வேறு கட்சிக்கு செல்வதும் சிறிது பின்னடைவு தான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். கட்சியை விட்டு விலகியதை விட ஓபிஎஸ் இபிஎஸ் மீது அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் தான் தற்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வராஜ் விலகல் காரணமாக இன்னும் பலர் அதிமுகவில் இருந்து இதே காரணத்தை சொல்லி விலகவும் மாற்றுக் கட்சிகளில் இணையவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா
அப்படி என்னதான் விளக்கமளித்தார் கோவை செல்வராஜ்?ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே நான்கரை ஆண்டு காலம் செயல்பட்டு விட்டனர்.
திராவிட பாரம்பரியம்
ஜெயலலிதாவுக்காக நான் இந்த இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். அப்படி இருக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவு எடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் என கூறியுள்ளார்.
கடும் குற்றச்சாட்டுகள்
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அன் கோவுக்கு எதிராக இப்படி ஒரு கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் பல்வேறு நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் உண்மையில் ஓபிஎஸ் இபிஎஸ் சண்டை காரணமாக கோவை செல்வராஜ் இப்படி முடிவெடுத்தாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் ஒருபுறம் விவாதம் எழுந்துள்ளது. மற்றொருபுறம் திமுக அல்லது பாஜகவில் கோவை செல்வராஜ் இணைவாரா என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.
என்ன காரணம்?
இந்த நிலையில் கோவை செல்வராஜ் விலகலுக்கு கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் காய் நகர்த்தல்களும் காரணம் என்கின்றனர் கோவை ரத்தத்தின் ரத்தங்கள். ஏற்கனவே திமுகவில் இணைந்துள்ள அந்த அதிமுக மாஜி எம்எல்ஏ மேலும் சிலரை திமுக தரப்புக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 'மின்சார கண்ணா' என அழைக்கப்படும் அமைச்சர் ஒருவரின் முன்னிலையில் விரைவில் கோவை செல்வராஜ் திமுகவில் இணையலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் வானதி சீனிவாசனும் கோவையைச் சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்களும் கோவை செல்வராஜ் பாஜகவில் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் எதிர்காலம்
இரு தரப்பில் இருந்தும் அழைப்புகள் வருவதால் சிறிது காலம் பொறுமையாக இருந்து அதன் பின்னர் முடிவெடுப்போம் என கோவை செல்வராஜ் திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர் நெருங்கிய ஆதரவு வட்டத்தினர். இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் தரப்பில் செயல்பாடுகள் சரியாக இல்லை எனவும் மிகவும் மெத்தனமாக செயல்படுவதால் அரசியல் எதிர்காலம் கருதி கோவை செல்வராஜ் தக்க நேரம் பார்த்து தாவி விட்டார் என்கின்றனர் கோவை ரத்தத்தின் ரத்தங்கள்.