ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் யாருக்கு? தீபக், தீபாவுக்கா? அரசுக்கா?-உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போயஸ் இல்லம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் வாங்கப்பட்டது போயஸ் இல்லம். ஜெயலலிதா அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தப்பிறகு முக்கியத்துவம் வாய்ந்த இல்லமாக மாறியது போயஸ் இல்லம். தமிழகத்தைப் புரட்டிப்போட்ட பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் இங்கு தான் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த வரையில் கோட்டைபோல் அதிகாரமையமாக விளங்கியது இந்த இல்லம்.

நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள போயஸ் இல்லம் அரசுடைமை
அவரது மறைவுக்குப்பின் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள இந்த இல்லம் அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் இருவருக்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அரசு கையகப்படுத்தியது. போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.அதை நினைவில்லமாக ஆக்குவதாக அறிவித்து அரசாணை வெளியிட்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் பார்வைக்காக திறந்தும் வைத்தார்.

இல்லம் தங்களுக்கே சொந்தம், தீபா, தீபக் வழக்கு
ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. போயஸ் இல்லம் குறித்த வழக்கில் இல்லம் தங்களுக்கே சொந்தம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் தங்களுக்கே சொந்தம் என அறிவிக்கக்கோரி, அரசின் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில் எதிர்த்து வாதம்
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
Recommended Video

இன்று தீர்ப்பு, இல்லம் யாருக்கு சொந்தம்
அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா வசித்த இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக அரசு இல்லமாக மாறுமா? அல்லது தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்படுமா? என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications