புதுச்சேரி புது முதல்வர் யார்? அமைகிறதா 'பாஜக' ஆட்சி.. முதல்வராகும் நமச்சிவாயம்?
சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆட்டையைப் போட்டு பாஜக கட்சிக்காரராக மாறிய நமச்சிவாயம் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமச்சிவாயம், புதுச்சேரி மாநில அமைச்சராக பணியாற்றிவந்தவர்தான். அதுவும் பவர்ஃபுல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ஆனால், முதல்வராக இருந்த நாராயணசாமி உடனான மோதல் போக்கு காரணமாக கடந்த, ஜனவரி 25ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசிலிருந்து விலகி, ஜனவரி 28ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

புதுச்சேரி ஆட்சி கலைந்தது
இதேபோல காங்கிரஸ்-திமுக கூட்டணியைச் சேர்ந்த, 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், நாராயணசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க தேவை எழுந்தது. இந்த நிலையில்தான் சட்டசபையில் இன்று நாராயணசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோற்றது. இதையடுத்து ஆட்சி கலைந்துள்ளது.

10 நாட்கள்தான் இருக்கிறது
துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பும் வெளியாகும்.

காபந்து முதல்வர்
இந்த குறுகிய காலத்தில் கூட நாராயணசாமி காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கூற மாட்டார் என தெரிகிறது. அதற்கு பதில், நமச்சிவாயம் தரப்பு ஆட்சியமைக்க உரிமை கோரவும், அதற்கு ஆளுநர் அனுமதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

ரங்கசாமி விரும்ப மாட்டார்
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முதல்வர் பதவிக்கு உரிமை கோர மாட்டார் என தெரிகிறது. குறுகிய காலத்தில் முதல்வர் பதவியில் இருக்க அவர் விரும்பமாட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications