இனிமே இப்படி கேட்காதீங்க.. "அவரை" பற்றி கேள்வி கேட்டதும்.. சட்டென பாய்ந்த எடப்பாடி.. பரபரப்பு!
சென்னை: இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி திடீரென செய்தியாளர்களிடம் கொஞ்சம் கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுறைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். அங்கு பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தியவர் பின்னர் தருமபுரம் ஆதீனம் சென்று அங்கு ஆதீனத்துடன் சந்திப்பு நடத்தினார்.
சமீபத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் நுழையவில்லை. ஆனால் இப்போது திமுக இதில் தலையிடுவது தவறு என்று எடப்பாடி கடும் விமர்சனங்களை வைத்தார், என்று எடப்பாடி குறிப்பிட்டு இருந்தார்.

ஆதீனம்
இந்த நிலையில்தான் இன்று ஆதீனத்தை எடப்பாடி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்டின பிரவேசம் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது. ஏன் இதற்கு முன்பே திமுக ஆட்சி காலத்தில் நடந்தது. அப்போதெல்லாம் யாரும் தடுக்கவில்லை. 500 ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை இது. அதை ஏன் தடுக்க பார்க்கிறார்கள். அடுத்த வருடம் பட்டினப்பிரவேசத்திற்கு மாற்று ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசிப்போம் என்று திமுக கூறுகிறது. ஆனால் அப்போது திமுக ஆட்சியில் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பல காலம்
சிதம்பரம் கோவிலில் ஆண்டாண்டு காலமாக சில நடைமுறைகள் உள்ளன. அதில் தலையிட கூடாது. இதில் அரசியல் செய்வது சரியல்ல. முழு விபரம் வந்த பின் அறிக்கை வெளியிடுவேன். ஆதீன விவகாரங்களில் அரசு மூக்கை நுழைக்க முயற்சி செய்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆதீன விவகாரத்தில் அரசு தலையிட வேண்டியது இல்லை. அவர்களின் பாரம்பரியத்தை அரசு தடுக்க பார்க்க கூடாது.

சிதம்பரம்
சிதம்பரம் கோவில் பற்றி இப்போது பேச முடியாது. முழுமையான அறிக்கை வெளியிடுவேன். இது மதம் தொடர்பான விவகாரம். அதனால் முழு அறிக்கை வெளியிடுவேன். மதத்தில் யாருக்கும் மூக்கை நுழைக்கும் அதிகாரம் இல்லை. சில நடைமுறைகளை மாற்ற கூடாது. இதில் அரசியல் செய்ய கூடாது.

சசிகலா கேள்வி
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் தினகரன் மற்றும் சசிகலா பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு கொஞ்சம் கோபமாக பதில் அளித்த எடப்பாடி.. தினகரன் அதிமுகவில் இல்லை. சசிகலா என்ன அதிமுகவில் இருக்கிறாரா? அவர் அதிமுக உறுப்பினர் இல்லை. அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமேலாவது அவரை பற்றி கேட்பதை நிறுத்துங்க என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். நேற்று முதல்நாள் அவரிடம் சசிகலா பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று சசிகலா பற்றி கேள்வி கேட்கப்பட்டதால் அவர் கோபமாக பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications