தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது ஏன்? யாரை ஏமாற்றுகிறீர்கள் - பாஜக அண்ணாமலை
தாலிக்கு தங்கம் திட்டம் அற்புதமான திட்டம். அதை உயர்கல்வித்திட்டமாக மாற்றியிருக்கின்றனர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு புதிதாக உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். யாரை ஏமாற்றுவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கேள்வி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. தமிழக பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, இல்லம் தேடி கல்வியைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். இதற்காக மத்திய அரசு நிதி கொடுக்கிறது என்றார். பள்ளி மாணவர்களுக்காக திறனை அதிகரிக்க பிரதமர் மோடி கடந்த 7 ஆண்டுகாலமாக திறனை அதிகரிக்க வேலை செய்கிறார். லட்சக்கணக்கானோர் திறன் அதிகரிக்கப்பட்டு வேலை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன்... திட்டத்தைப் பற்றி பேசிய அண்ணாமலை, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல மோடி என்ற புலியைப் பார்த்து தமிழக முதல்வர், நிதியமைச்சர் சூடு போட்டுக்கொள்வதாக கூறினார்.
நான் முதல்வன் திட்டத்திற்கு திறனை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞருக்கு ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. இதன் மூலம் என்னமாதிரியான நிர்வாகத்திறமையை கற்றுக்கொடுத்து விட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். மத்திய அரசுடன இணைந்து செயல்படாமல் தனித்து செயல்படுவது தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் இருந்தது. அதன் மூலம் ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வானார்கள். 56 சதவிகிதத்திற்கும் மேலாக தேர்ச்சி விகிதம் இருந்தது. மத்திய அரசு மீதும் நீட் மீதும் உள்ள காழ்ப்புணர்ச்சியால் இ பாக்ஸ் எனப்படும் பயிற்சியை ரத்து செய்திருக்கிறது. எந்த ஒரு குழந்தையும் நீட் தேர்வில் பாஸ் ஆகிவிடக்கூடாது என்பதுதான் திமுக அரசின் எண்ணம் என்று குற்றம் சாட்டினார்.
தாலிக்கு தங்கம் திட்டம் அற்புதமான திட்டம். அதை உயர்கல்வித்திட்டமாக மாற்றியிருக்கின்றனர். முதலில் இருந்த திட்டத்தின்படி பத்தாவது வரை படித்தவர்களுக்கு ஒரு சவரன் தங்கமும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 65000 ரூபாய் கிடைக்கும். பட்டதாரிகளுக்கு ஒரு சவரன் தங்கமும் ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். இதன் மூலம் 90 ஆயிரம் வரை ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும்.
அதை நிறுத்தி விட்டு புதிதாக உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் ரூ. 36000 மட்டுமே கிடைக்கும். தமிழகத்தில்தான் பெண் குழந்தைகள் அதிக அளவில் உயர்கல்விக்கு செல்கின்றனர். இது தமிழகத்திற்கு பெருமை என்று கூறினார். யாரை ஏமாற்றுவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. என்று கேள்வி எழுப்பினார். அரசுப்பள்ளியில் படித்து மேற்படிப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இருவருக்குமே மாதம் ரூ. 1000 தர வேண்டும் என்றும் கூறினார் அண்ணாமலை.
ஒரு பக்கம் பூங்காவை உருவாக்கும் அதே நேரத்தில் குப்பைக்கிடங்குகளும் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் கூறினார். சென்னைவாசிகளின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும் என்றும் கேள்வி எழுப்பினார். மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக இப்போது ஆளுங்கட்சியாக அமர்ந்த பின்னர் நிதி ஒதுக்கியுள்ளனர். தமிழக மக்களை முட்டாள் ஆக்குவதற்காகவே திராவிட மாடல் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications